சர்ச்சை கருத்து சொன்ன ராம் சரண் மனைவி.. ரவுண்டு கட்டி விளாசும் இணையவாசிகள்.. இதெல்லாம் தேவையா?
ஹைதராபாத்: தெலுங்கு நடிகர் ராம்சரண் மனைவி உபாசனா கோனிதேலா சமீபத்தில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல் குழந்தையைப் பெற்றெடுத்த அவர், திருமணமான 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தாய்மையை அனுபவித்தார். தற்போது, உபாசனாவின் சில கருத்துகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
அப்போலோ அறக்கட்டளையின் துணைத் தலைவராகவும், வெற்றிகரமான தொழிலதிபராகவும் அறியப்படும் உபாசனா, திருமணத்திற்குப் பிறகு 10 ஆண்டுகள் குழந்தை பெற்றுக்கொள்ளாததற்குக் காரணம், தாமும் ராம்சரணும் தங்கள் தொழிலில் கவனம் செலுத்த விரும்பியதுதான் எனக் கூறியுள்ளார். கருமுட்டைகளை மருத்துவமுறையில் பாதுகாப்பாக வைத்திருப்பது குறித்தும் அவர் பேசியிருந்தார்.
சமீபத்தில் ஹைதராபாத் ஐஐடி மாணவர்களுடன் உரையாடிய உபாசனா, "திருமணம் செய்துகொள்ள எத்தனை பேர் விரும்புகிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார். ஆண்களை விட பெண்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே கைகளை உயர்த்தியதைக்கண்டு ஆச்சரியமடைந்ததாக அவர் குறிப்பிட்டார். இது ஒரு புதிய, முற்போக்கான இந்தியா என்பதைக் காட்டுவதாக அவர் ட்வீட் செய்தார். பெண்கள் முதலில் சுயமாக தங்கள் காலில் நிற்க வேண்டும் என்றும், அதன்பிறகு குழந்தை பெறுவது குறித்து சிந்திக்கலாம் என்றும், அதுவரை கருமுட்டைகளை மருத்துவமுறையில் பாதுகாப்பாக வைக்கலாம் என்றும் அவர் தனது சொந்த அனுபவத்தை உதாரணமாகக் கூறினார்.

இருப்பினும், அவரது இந்த கருத்து சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. பலரும் உபாசனாவின் பேச்சை ஆதரித்தாலும், பெரும்பாலானோர் இதற்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர். சில மருத்துவர்களும் அவரது கருத்துக்கு எதிராகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
சர்ச்சைக் கருத்து: உபாசனா கூறுகையில், "நான் இன்று என் சொந்த காலில் சுதந்திரமாக நிற்கிறேன். என் வருமானத்தால் நான் பொருளாதார ரீதியாக வளர்ந்துள்ளேன். இது என் தன்னம்பிக்கையை அதிகரித்துள்ளது. எந்தவொரு முடிவையும் எடுக்கும் தைரியத்தை இது எனக்கு அளித்துள்ளது. உங்கள் வாழ்க்கையில் 30 வயதிற்குள் உங்கள் குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாகத் தெரிந்துகொள்ளுங்கள். அதன் பிறகு உங்களைத் தடுக்க யாராலும் முடியாது." என்று கூறியிருந்தார்

விமர்சனங்கள்: ஆனால், விமர்சனங்கள் உபாசனா 22 வயதிலேயே திருமணம் செய்துகொண்டார் என்பதையும், அவர் ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன. சாதாரண மக்களுக்கு கருமுட்டை பாதுகாத்தல் மற்றும் ஐவிஎஃப் போன்ற சிகிச்சைகள் மிகவும் விலை உயர்ந்தவை. இதில் தோல்வியடைந்தால் ஏற்படும் வலியைத் தாங்க முடியாது என்பதால், அவரது அனுபவத்தை அனைவருக்கும் பொதுமைப்படுத்துவது சரியல்ல என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். மேலும், அப்பல்லோ கருத்தரிப்பு மையத்தின் விளம்பரத்திற்காக அவர் இப்படிப் பேசுவதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
பதிலடி: ஹைதராபாத்தைச் சேர்ந்த டாக்டர் சுனிதா சையம்மா கருத்துத் தெரிவிக்கும்போது, உபாசனா கருத்தை தான் ஏற்கவில்லை எனக் கூறியுள்ளார். உபாசனாவுக்குத் திருமணம் ஆகும் போது 23 வயது, ராம்சரண் 27 வயது. பெண்கள் தொழிலில் கவனம் செலுத்தித் திருமணத்தைத் தாமதப்படுத்தினால் வயதான கணவர் கிடைப்பார் என்று உபாசனா சொல்வது தவறு. கருமுட்டை பாதுகாப்பாக வைத்திருத்தல் என்பது பெண்களுக்கு ஒரு காப்பீடு அல்ல. கருமுட்டைகளை மருத்துவ முறையில் பாதுகாப்பாக வைத்திருந்தாலும், அது வெற்றிகரமான கரு இடமாற்றம் மற்றும் வெற்றிகரமான கர்ப்பத்தில் முடிவடையும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. மேலும், திருமணத்தையும் தொழிலையும் ஏன் ஒரே நேரத்தில் நிர்வகிக்க முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


Click it and Unblock the Notifications











