சர்ச்சைக்குரிய மார்பிங் போட்டோ வெளியிட்ட விவகாரம்... பிரபல இயக்குநர் மீது வழக்குப்பதிவு!
மார்ஃப்பிங் புகைப்படம் வெளியிட்டது தொடர்பாக பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை : மார்ஃப்பிங் புகைப்படம் வெளியிட்டது தொடர்பாக பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சர்ச்சைகளுக்கு பேர் போனவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா. ஏதாவது டிவீட் போட்டு யாரையாவது வம்பிழுப்பது தான் இவரது முதன்மை பணி.
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை கடுமையாக தாக்கி ராம் கோபால் வர்மா எடுத்த படம் கம்ம ராஜ்யம் லோ கடப்பா ரெட்டுலு. இந்த படத்தில் பிரபல கிறிஸ்தவ மத போதகர் கே.ஏ.பாலையும் அவர் கிண்டல் செய்திருந்தார்.

சென்சார் மறுப்பு
இந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை குழுவினர் மறுத்துவிட்டனர். மேலும், படத்தின் பெயரை மாற்றும்படி ஆந்திர உயர்நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதையடுத்து, படத்தின் பெயரை அம்மா ராஜ்யம் லோ கடப்பா பிட்டலு என மாற்றினார்.

தொடரும் பிரச்சினை
இருப்பினும் படத்திற்கு சென்சார் வழங்குவதில் பிரச்சினை நீடித்து வருகிறது. இதனால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சர்ச்சை புகைப்படம்
இந்த சூழலில் ராம் கோபால் வர்மா தனது டிவிட்டர் பக்கத்தில், மதபோதகர் கே.ஏ.பால் கையில் இருந்து சென்சார் சான்றிதழ் வாங்குவது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இதற்கு பால் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

போலீசில் புகார்
கே.ஏ.பாலின் செயலாளர் ஜோதி பேகல் என்பவர் ஐதராபாத் சைபர் போலீசில், ராம் கோபால் வர்மா மீது புகார் ஒன்றை அளித்தார். அதில், முன்னாள் குடியரசு தலைவர் பிராணப் முகர்ஜியுடன் கே.ஏ.பால் இருக்கும் புகைப்படத்தை மார்ஃப்பிங் செய்து, இயக்குனர் ராம் கோபால் வர்மா பித்தலாட்டம் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு
இதையடுத்து இயக்குனர் ராம் கோபால் வர்மா மீது ஐதராபாத் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே ராம் கோபால் வர்மா விரைவில் கைது செய்யப்படலாம் என டோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











