‘பாகுபலி கி பாப் கபாலி’... சர்ச்சைகளைத் தொடர்ந்து மீண்டும் சரண்டர் ஆனார் ராம்கோபால் வர்மா
சென்னை: ரஜினியின் கபாலி பட டீசரை பாகுபலி படத்தோடு ஒப்பிட்டு சர்ச்சையில் சிக்கிய ராம்கோபால் வர்மா, ‘பாகுபலிக்குப் பிறகு எந்த டிரெய்லரைப் பார்த்தாலும் பாகுபலியோட விரல் நகம் போலவே இருக்கிறது. நான் பாகுபலி 2 க்காக நான் காத்திருக்கிறேன் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்' என தனது டிவிட்டிற்கு விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து தனது டிவீட்டுகள் மூலம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருபவர் இயக்குநர் ராம்கோபால் வர்மா.
சமீபத்தில் ரஜினி குறித்த அவரது விமர்சனம், சமூகவலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செல்பி...
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் '2.0' படப்பிடிப்பின் போது, ஏமி ஜாக்சனோடு ரஜினி எடுத்துக் கொண்ட செல்பி புகைப்படத்தை வைத்து ராம்கோபால் வர்மாவின் விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சிக்ஸ் பேக்ஸ் இல்லை...
இது தொடர்பான அவரது பதிவில், "மிகப்பெரிய நட்சத்திரமாக இருக்கும் இந்த மனிதர், நட்சத்திர அந்தஸ்துக்கு அழகு முக்கியம் என்ற எண்ணத்தையே தூள் தூளாக்குகிறார். பார்க்க நன்றாக இருப்பவர் அல்ல, சிக்ஸ் பேக்ஸ் கிடையாது, சரியான உடலமைப்பும் கிடையாது, மொத்தம் இரண்டரை நடன அசைவுகள் தான் தெரியும்.

கடவுளின் ஆசிர்வாதம்...
உலகில் வேறெங்கும் இப்படியிருக்கும் ஒருவர் சூப்பர் ஸ்டார் ஆக முடியாது. இவர் கடவுளுக்கு என்ன செய்தார், கடவுள் இவருக்கு இப்படி ஒரு வாழ்க்கையை தந்துள்ளார் என்பது தெரியவில்லை.

நல்ல உதாரணம்...
ரசிகர்களுக்கு திரைப்படத்தில் என்ன பிடிக்கும் என்பதை ஒருவரும் கணிக்க முடியாது என்பதற்கு ரஜினி சார் தான் ஆகச்சிறந்த உதாரணம். உலகின் உயர்ந்த மனோதத்துவ நிபுணர்களும், ரசிகர்களின் இந்த ரஜினி பித்தினை விளக்க முடியாமல் குழம்பிப் போவார்கள்" என ராம்கோபால் வர்மா விமர்சித்திருந்தார்.

ரசிகர்கள் கோபம்...
ரஜினியைப் பற்றிய ராம் கோபால் வர்மாவின் இந்த கருத்துக்களுக்கு ரஜினி ரசிகர்கள் பலரும் சமூகவலைதளத்தில் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதேபோல், ரஜினியை விட பவன் கல்யாண் 5 மடங்கு சிறந்தவர் என தனது மற்றொரு டிவிட் மூலம் மீண்டும் பிரச்சினையில் சிக்கினார் ராம் கோபால் வர்மா. இதனால், தொடர்ந்து ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு அவர் ஆளாகி வந்தார்.
கபாலி டீசர்...
இந்நிலையில், ப.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியானது. வெளியான சில மணி நேரங்களிலேயே அந்த டீசர் சாதனை புரிந்தது. இந்த டீசருக்கு பல்வேரு தரப்பிலிருந்தும் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.
4 முறை பார்ப்பேன்...
அந்தவகையில், ராம்கோபால் வர்மாவும் கபாலி டீசரைப் புகழ்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், "ரஜினி ஒருவரால் மட்டுமே இதுபோன்று திரையை அதிர வைக்க முடியும். நான் இந்த படத்தை முதல் நாளிலேயே 4 முறை பார்க்கப் போகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
பாகுபலியை விட...
கூடவே, பல்வேறு வசூல் சாதனைகளை படைத்த ‘பாகுபலி' படத்தைவிட ‘கபாலி' சிறப்பாக உள்ளதாகவும் போகிற போக்கில் புதிய பிரச்சினைக்கு அஸ்திவாரம் போட்டார் அவர். இதனால் பாகுபலி ரசிகர்களின் கோபத்திற்கு அவர் ஆளானார்.
காத்திருக்கிறேன்...
இந்நிலையில், தனது டிவிட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார் ராம்கோபால் வர்மா. அதில் அவர், "பாகுபலிக்குப் பிறகு எந்த டிரெய்லரைப் பார்த்தாலும் பாகுபலியோட விரல் நகம் போலவே இருக்கிறது. நான் பாகுபலி 2 க்காக நான் காத்திருக்கிறேன் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்" என பாகுபலி ரசிகர்களை சமாதானம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











