Ramana film: சன் டிவியில் ரமணா படம்.. மறக்க முடியுமா அந்த விஜயகாந்த்தை!
சென்னை: சன் டிவியில் இப்போது சனிக் கிழமைகளில் காலை வேளைகளில் சீரியல்களுக்கு இடமில்லை. முதலில் ஒரு படம். அந்த படம் முடிந்த பின்னர் அடுத்தடுத்து சீரியல்கள். கடந்த மே மாதம் குழந்தைகளுக்கு விடுமுறை விட்டதிலிருந்து இப்படித்தான் நடக்குது.
இன்று திரையுலகின் கேப்டன் என்று ஒரு காலத்தில் செல்லமாகவும், மரியாதையாகவும் அழைக்கப்பட்ட விஜயகாந்தின் ரமணா படம் சன் டிவியில் ஒளிபரப்பானது.. அதைப் பார்த்தபோது மனசுக்குள் ஏகப்பட்ட விஷயங்கள் மெல்ல விரிந்து கொண்டு போயின.
விஜயகாந்தின் திரையுலக வாழ்க்கையில் ரமணா படம் ஒரு மைல் கல் எனலாம்.. முருகதாஸ் மிக அருமையாக விஜயகாந்த் அரசியல் வாழ்க்கைக்கு வித்திடும் வகையில் மிக எழுச்சியாக இந்த படத்தை இயக்கி விஜயகாந்த் ரசிகர்களை மட்டுமல்ல அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.

அரசியலில் பரபரப்பு
ரமணா படம் வெளிவந்த பிறகு விஜயகாந்த் கட்சி பற்றி அடுத்தடுத்து பரபரப்பு காட்சிகள் அரங்கேறி தமிழகத்தை விஜயகாந்தின் பக்கம் திருப்பியது. லஞ்சத்தை பத்தி இயக்குனர் ஷங்கர் நடிகர் கமல்ஹாசனை வைத்து இந்தியன் படம் எடுத்த போதுகூட ஏற்படாத விழிப்புணர்வு, ரமணா படத்தின் மூலம் மக்களுக்கு வந்தது.

என்ன உசத்தி
ரமணா படம் அப்படி என்ன உசத்தியாக மக்களுக்கு லஞ்சம் லாவண்யத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்று நீங்கள் கேட்கலாம். படத்தை முருகதாஸ் மிக எளிமையாக இயக்கி இருப்பார். காட்சிகளும் சரி, வசனமும் சரி.. அதிரடியாக இருக்கும். பிரமாண்டம் அது இது என்று மக்களின் கவனத்தை திசை திருப்பாமல் கதையை மட்டுமே மக்கள் கவனிக்கும்படி திரைப்படம் எளிமையாக மக்களை சென்று அடையும்படி, அதே சமயம் மக்கள் கோபப்படும்படி எடுத்து இருப்பார் முருகதாஸ்.

புள்ளி விவரங்களையும்
புள்ளிவிவரங்களை விலாவாரியாக பேசி இந்தப் படத்தில் விஜயகாந்த் அசர வைத்தார். இது மக்களை வெகுவாக கவர்ந்துவிட்டது. அதோடு அரசியலில் மிகத் தைரியமாக விஜயகாந்த் முன் வைத்த காலை பின் வாங்காமல் அரசியலில் களம் இறங்கி, தனியாக போட்டியிட்டு, விருத்தாசலம் தொகுதியில் வென்றும் காண்பித்த விஜயகாந்த், பல ஆயிரம் கலைஞர்களின் பசியை தீர்த்து வைத்த வள்ளல்.

வரவேண்டும் தலைவனாக
இன்று ரமணா பார்த்தபோது அந்த விஜயகாந்த்தான் நினைவுக்கு வந்தார். படத்தின் முடிவுக் காட்சிதான் அப்படத்தின் மிகப் பெரிய பலமே. எதையும் சமரசம் செய்யாமல் விஜயகாந்த் தனக்குத் தானே கொடுத்துக் கொண்ட தண்டனையாக அதைக் காட்டி மக்களை அழ வைத்திருப்பார். தப்பு செய்தா தண்டனை உண்டு.. இதுதான் அந்தப் படத்தின் நீதியும் கூட. உடல் நலமின்றி இருக்கும் அவர், நன்றாக தேறி, மேடையில் நாக்கைத் துருத்தி கோபத்துடன் பேசும் அந்த அழகை பார்க்க வேண்டும்... காத்திருக்கிறோம் விஜயகாந்த் சார்!


Click it and Unblock the Notifications











