நானாக வாய்ப்பு கேட்டதில்லை.. எல்லாத்துக்கும் காரணம் இளையராஜாதான்.. ராமராஜன் நெகிழ்ச்சி
சென்னை: ராமராஜன் 80களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். கிராமத்து பக்கம் ராமராஜனுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே இருந்தது. முக்கியமாக ஹீரோவாக மட்டுமே நடித்த ஒரே ஒரு கதாநாயகன் என்றால் அது ராமராஜன் மட்டும்தான். ஒருகட்டத்தில் அவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைய ஆரம்பிக்க அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். பிறகு ஆளே காணாமல் போன அவர் இப்போது சாமானியன் படத்தில் நடித்திருக்கிறார். இன்று படம் ரிலீஸாகியிருக்கிறது.
ராமராஜன் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் பீக்கில் இருந்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசனுக்கு ஈடாக புகழை பெற்றவர். இன்னும் சொல்லப்போனால் கிராமங்களில் அவர்கள் இருவரைவிடவும் ராமராஜனுக்கு ரசிகர்களும், மன்றங்களும் அதிகம் இருந்தன. முக்கியமாக தான் நடித்த அத்தனை படங்களிலும் சோலோ ஹீரோவாக மட்டுமே நடித்தவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், விக்ரம் உள்ளிட்டோர் கூட அப்படி நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ரீ என்ட்ரி: நடிகை நளினியை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர் பிறகு பிரிந்தார். இடையே அவர் அரசியலிலும் கவனம் செலுத்தினார். ஆனால் கடந்த சில காலமாகவே அமைதியாக இருந்த அவர் இப்போது சாமானியன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். இதில் அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். படமானது இன்று ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் நேற்று அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
தில்லானா மோகனாம்ப்பாளா?: அப்போது பேசிய அவர், "நான் நிறைய படங்களுக்கு கதைகளை கேட்டுத்தான் வருகிறேன். ஆனால் எதுவும் செட் ஆகவில்லை. நடிகர் என்றால் எந்த கேரக்டராக இருந்தாலும் நடித்துதான் ஆக வேண்டும். ஆனால் அது எப்படி ஒர்க் அவுட் ஆகிறது என்பதில்தான் இருக்கிறது. உலகத்துக்கே நடிப்பை கற்றுக்கொடுத்தவர் சிவாஜி கணேசன். அதேபோல் படங்களில் நடித்து மூன்று முறை தொடர்ந்து தேர்தலில் வென்றவர் எம்ஜிஆர். கரகாட்டக்காரன் படத்தை எடுத்துக்கொண்டால் அனைவருக்கும் தில்லானா மோகானாம்பாள் படம்தான் நியாபகத்துக்கு வரும். ஆனால் அந்தப் படத்தில் சிவாஜிக்கு பதில் எம்ஜிஆர் நடித்திருந்தால் எப்படி செட் ஆகியிருக்கும்.
சரியாக போகவில்லை: ஒருமுறை விநியோகஸ்தர்கள் சென்று சிவாஜியிடம் எம்ஜிஆர் மாதிரியும், எம்ஜிஆரிடம் சிவாஜி மாதிரியும் நடியுங்கள் என்று சொனார்கள். சரி முயன்று பார்ப்போம் என்று இருவரும் அப்படி நடித்தனர். எம்ஜிஆர் நடித்த பாசம், சிவாஜி நடித்த தங்க சுரங்கம் படங்களை இயக்கியவர் ராமண்ணா. ஆனால் இரண்டுமே சரியாக போகவில்லை. பிறகுதான் அவர்களிடம் சென்று நீங்கள் நீங்களாகவே நடியுங்கள் என்று கூறியிருக்கிறார்கள்.
ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான்: என்ன கேரக்டரில் நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என எனக்கு தோன்றுகிறதோ அப்படித்தான் நடித்துவருகிறேன். நான் சம்பாதித்து கார், பங்களா வாங்க வேண்டும் என்றெல்லாம் நினைக்கவில்லை. ஆரம்பத்திலிருந்து கதைகள் பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பேன். எந்தப் படத்துக்கும் நானாக தேடி போய் வாய்ப்பு கேட்டதில்லை. என்னை நடிகராக அறிமுகம் செய்த தயாரிப்பாளர், இயக்குநரை மறக்கமாட்டேன்.
இளையராஜாதான் காரணம்: ராமராஜனின் திரைப்பயணம் சினிமாவில் 4 ஆண்டுகள்தான். 1986ஆம் ஆண்டு தொடங்கி 1990ஆம் ஆண்டுவரை மட்டும்தான் பீக்கில் இருந்தேன். ஆனால் இன்றைக்குவரைக்கும் நான் மக்கள் மனதில் நிற்கிறேன் என்றால் இசைஞானி இளையராஜா மட்டும்தான் காரணம். என்னை மக்கள் இன்னமும் மறக்காமல் இருக்கிறார்கள் என்றால் அது இளையராஜாவின் பாட்டுகள்தான்" என்றார்.


Click it and Unblock the Notifications











