என்றும் சலிக்காத வாழைப்பழக் காமெடி.. கரகாட்டக்காரன் வெளியாகி 35 ஆண்டுகள் ஆச்சுப்பா!
சென்னை: தமிழ் சினிமாவின் என்றும் சலிக்காத ஆகச்சிறந்த காமெடிகளை வரிசைப்படுத்துங்கள் எனக் கூறினால் அதில் கட்டாயம் கரகாட்டக்காரன் படத்தில் இருக்கக்கூடிய வாழைப்பழ காமெடி இடம் பெறும். இந்த வாழைப்பழ காமெடிக்கு எண்பது வயதில் இருக்கக்கூடிய பெரியவர்கள் முதல் 90ஸ் கிட்ஸ்கள் வரை தீவிரமான ரசிகர்கள் என்றே கூறலாம். யாரிடம் சென்று கேட்டாலும் வாழைப்பழ காமெடி இடம்பெற்றுள்ள கரகாட்டக்காரன் படத்தை எத்தனை முறை பார்த்திருக்கிறீர்கள் என கேட்டால் அவர்கள் சொல்வது எப்படியும் பத்து முதல் 20 தடவைக்கு மேல் பார்த்திருப்பேன் என ஒரு சிலர் கூறலாம், ஒரு சிலர் கணக்கே இல்லப்பா ஏகப்பட்ட தடவ பார்த்தாச்சு எனவும் கூறலாம். இந்த அளவுக்கு கரகாட்டக்காரன் படத்திற்கும் ரசிகர்கள் இன்றும் உள்ளனர்.

தமிழ் சினிமாவில் ரஜினியும் கமலும் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் அவர்கள் இருவரையும் அசைத்துப் பார்த்த ஒரு நடிகர் என்றால் அது ராமராஜன் தான். கிராமத்து மக்களின் வாழ்வியலை தனது படங்களில் மூலம் பிரதிபலித்து கிராமங்களில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளத்தை தன் வசம் வைத்திருந்தார். குறிப்பாக பெண்கள் ரசிகர்களும் இவருக்கு அதிகமாகவே இருந்தனர். இப்படியான ராமராஜன் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் 1989 ஆம் ஆண்டு ஜூன் 16ஆம் தேதி வெளியானது. இந்த படம் வெளியாகி 35 ஆண்டுகள் ஆகின்றது எனக் கூறினால் அந்த படத்தின் தீவிர ரசிகர்கள் நம்ப மறுப்பார்கள்.

நகைச்சுவை கலந்த திரைக்கதை: இந்த படத்தினை இயக்குநர் கங்கை அமரன் இயக்கியிருந்தார். இளையராஜா இசையமைக்க படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். படம் முழுக்க வரும் நகைச்சுவை கலந்த திரைக்கதை மூலம் கரகாட்டக்காரன் படத்தினை இயக்கி இருப்பார் கங்கை அமரன். நகைச்சுவை கலந்து திரைக்கதை என்பதாலேயே இந்த படத்தை தில்லானா மோகனாம்பாள் கதையை போன்று உள்ளது எனக் கூறும் தமிழ் சினிமாவின் தீவிர ரசிகர்களும் உள்ளனர்.

சொப்பன சுந்தரிய யாரு வெச்சுருக்கா: வாழைப்பழ காமெடி மட்டும் இல்லாமல், சொப்பன சுந்தரிய யாரு வெச்சுருக்கா காமெடி எல்லாம் இன்றைக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரபேற்பு உள்ளது. சொப்பன சுந்தரிய யாரு வெச்சுருக்கா காமெடியின் பெயரை வைத்து ஒரு படமும், ஒரு பாடலும் ஜில் ஜங் ஜக் படத்தில் ஒரு காட்சியும் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர்கள்: ராமராஜன், கனகா, சந்தான பாரதி, சந்திரசேகர், சண்முகசுந்தரம், காந்திமதி, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா என பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது. கனகா இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கனகாவுக்கும் ராமராஜனுக்கும் இடையிலான காதல் காட்சிகள் ஒரு பக்கம் சுவாரசியமாக இருந்தாலும், கவுண்டமணி செந்தில் கோவை சரளா இவர்களுக்கு இடையேயான காமெடி காட்சிகளுக்காகவே திரையரங்கில் வந்து படம் பார்த்தவர்கள் ரொம்பவே அதிகம். ஒரு வருடத்திற்கு மேல் ஓடிய இந்த திரைப்படம் அன்றைய காலகட்டத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாக இருந்தது.

எம்.ஜி.ஆருக்கு அடுத்து ராமராஜன்: மதுரையில் உள்ள நாட்டிய திரையரங்கில் இந்த படம் மொத்தம் 425 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. இந்த இமாலய வெற்றிதான் ரஜினிகாந்தையும் கமல்ஹாசனையும் அசைத்துப் பார்த்தது. இளையராஜாவின் இசையில் இந்த படத்தில் மொத்தம் எட்டு பாடல்கள் இடம் பெற்றது. எட்டு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் மாரியம்மா பாடல் கட்டாயம் ஒலிக்கும் திருவிழாக்கள் இன்றைக்கும் தமிழ்நாட்டில் உள்ளது. இது மட்டும் இல்லாமல் கிராமங்களில் திரைகட்டி படம் திரையிடப்பட்ட கலாச்சாரம் தமிழ்நாட்டில் அதிகமாக இருந்தபோது, எம்.ஜி.ஆரின் உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்குப் பின்னர் அதிகம் திரையிடப்பட்ட படம் ராமராஜனின் கரகாட்டக்காரன் தான்.

35 ஆண்டுகள் ஆச்சு: இந்தியா மட்டுமில்லாமல் கரகாட்டக்காரன் திரைப்படம் ஜப்பான், ரஷ்யா போன்ற நாடுகளிலும் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவால் திரையிடப்பட்டது. 1989 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறப்பு விருதும் இந்த படத்திற்கு வழங்கப்பட்டது. கரகாட்டக்காரன் படம் வெளியாகி இன்றுடன் 35 ஆண்டுகள் ஆகிறது. இதனை கரகாட்டக்காரன் பட ரசிகர்களும் ராமராஜன் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











