விராட் கோலி பயோபிக்கில் ரன்பீர் கபூர்.. முன்னாள் ஆர்.சி.பி வீரரின் பேச்சால் குஷியான ரசிகர்கள்!
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கடந்த ஒரு சதாப்தத்திற்கு மேலாக இருப்பவர் விராட் கோலி. 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து இந்திய அணியில் தனக்கான இடத்தினை உருவாக்கிக் கொண்டார். ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் முறியடிக்கபடவே முடியாது என கூறப்பட்டு வந்த சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடித்து வருகின்றார்.
கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஒருநாள் உலகக் கோப்பையில் 50வது ஒருநாள் சதத்தினை விளாசி சச்சின் சாதனையை முறியடித்தார். தனது ஆக்ரோசமான கிரிக்கெட்டினால் உலகம் முழுவதும் தனக்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டவர் விராட். 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் விராட் கோலி மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக இடம் பெற்றிருந்தார். இவர் இதுவரை 4 ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில் 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டார். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை ஐசிசி அறிமுகம் செய்த ஆண்டே இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

அதன் பின்னர் நடைபெற்ற உலகக் கோப்பைகளில் விராட் கோலி விளையாடி இருந்தாலும் மகுடம் சூடவில்லை. இதுமட்டும் இல்லாமல் 2008ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணிக்காக வீரராக விளையாடத் தொடங்கி, அந்த அணியின் கேப்டனாக உருவெடுத்து மீண்டும் வீரராகவே தொடர்ந்து வருகின்றார். ஆனால் விராட் கோலி இன்னும் ஒரு கோப்பையைக் கூட வெல்லாத ஸ்டார் ப்ளேயராக உள்ளார்.
ஏமாற்றத்தில் விராட்: இவரது கேப்டன்சியில் இந்திய அணியும் பெங்களூரு அணியும் பல போட்டிகளை வென்றிருந்தாலும் இந்திய அணி உலகக் கோப்பையையும் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையையும் வெல்லாதது அவரது ரசிகர்களுக்கும் ஏன் அவருக்குமே ஏமாற்றம் அளிக்கும் விஷயமாகத்தான் உள்ளது. விராட் கோலியின் ஆக்ரோசமான ஆட்டம் பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கடுமையாக விமர்சித்திருந்தாலும் விராட் கோலி களத்தில் தீயாக செயல்பட்டு வருகின்றார்.

கட்டுக்கோப்பான உடல்: விராட் கோலி இந்திய அணியில் அறிமுகமானதில் இருந்து இதுவரை உடல்தகுதி தொடர்பாக ஒரு போட்டியில் கூட விலகியதில்லை. அந்த அளவிற்கு தனது உடலை கச்சிதமாக பார்த்துக்கொண்டு வருகின்றார். இவரது கேப்டன்சியில் இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் தங்களது உடலில் அதிக கவனம் செலுத்தவேண்டும் என பிறப்பிக்கப்படாத உத்தரவை அறிவித்திருந்தார் என்ற தகவலும் கிரிக்கெட் வட்டாரத்தில் உள்ளது.
விராட் கோலி பயோ பிக்: இந்நிலையில் விராட் கோலியின் பயோ பிக் தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக்கிடம் கிரிக்பஸில் கேட்கப்பட்ட கேள்விக்கு ரன்பீர் கபூர் சரியான தேர்வாக இருப்பார் என கூறியுள்ளார். ரன்பீர் கபூர் சமீபத்தில் அனிமல் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படம் ரூபாய் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது. அதேபோல், ஹர்திக் பாண்டியாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கினால் அதில் ரன்வீர் சிங் சரியான தேர்வாக இருப்பார் எனவும் கூறியுள்ளார். ஷிகர் தவான் பயோபிக்கில் அக்ஷய் குமார் பொருத்தமாக இருப்பார் எனவும் தெரிவித்துள்ளார். தினேஷ் கார்த்திக் கூறுவது அவருடைய கற்பனையாக இருந்தாலும் இது எதிர்காலத்தில் நடந்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான செய்திகள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.



Click it and Unblock the Notifications











