நடிகை ப்ரியா ராமன் - நடிகர் ரஞ்சித் விவாகரத்து
நடிகை ப்ரியா ராமன் - நடிகர் ரஞ்சித் ஆகியோருக்கு சென்னை குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து வழங்கியது.
பொன் விலங்கு, சிந்து நதி பூ, மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி, பசுபதி மே பா ராசக்காபாளையம் உள்பட பல படங்களில் நடித்தவர் ரஞ்சித். 'பீஷ்மர்' என்ற படத்தை இவர் இயக்கி, கதாநாயகனாக நடித்தார்.

இவரும், வள்ளி, சூரியவம்சம் உள்பட பல படங்களில் நடித்த பிரியா ராமனும் 'நேசம் புதுசு' என்ற படத்தில் ஜோடியாக நடித்தார்கள்.
அப்போது, இரண்டு பேருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த 1999-ம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஆதித்யா (வயது 7), ஆகாஷ் (3) என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
ரஞ்சித்துக்கும், பிரியா ராமனுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இரண்டு பேரும் விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி, தாம்பரத்தில் உள்ள நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மனு செய்தார்கள். கடந்த 6-ந் தேதி இருவருக்கும் விவாகரத்து அளித்து தீர்ப்பு கூறப்பட்டது.
விவாகரத்துக்குப்பின், ரஞ்சித்-பிரியா ராமன் இருவரும் கூறுகையில், "எங்கள் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுவிட்டது. இரண்டு பேருக்கும் இடையே வேறு வேறு திசைகள், வேறு வேறு பயணங்கள் இருப்பதைப் புரிந்துகொண்டோம். அதனால், சுமுகமாக பிரிவது என்று முடிவு செய்து நீதிமன்றத்தை அணுகினோம். இப்போது பிரிகிறோம்.
குழந்தைகள் இருவரும் பிரியா ராமனிடமே இருக்கும். ஒரு தாயால் மட்டுமே குழந்தைகளை நன்றாக பராமரிக்கமுடியும். நாங்கள் இருவரும் கணவன்-மனைவி உறவில் இருந்து விடுபட்டாலும், நல்ல நண்பர்களாக இருப்போம். நானும் மகன்களை அடிக்கடி போய் பார்த்துக் கொள்வேன்," என்றனர்.


Click it and Unblock the Notifications











