Dhurandhar 2 Box Office: முதல் நாளே அடித்து ஆடிய துரந்தர் 2.. இத்தனை கோடிகள் வசூலா?
சென்னை: பாலிவுட் இயக்குநர் ஆதித்ய தார் இயக்கி தயாரித்த படம் துரந்தர். இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டு, முதல் பாகம் ஏற்கனவே வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது. இரண்டாவது பாகம் மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனாலும், மார்ச் 18ஆம் தேதி பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது. படம் மொத்தம் 4 மணி நேரம் ஓடக்கூடிய அளவுக்கு மிகப்பெரிய படமாக எடுத்துள்ளார்கள். ஆனாலும் படம் பார்த்த ரசிகர்கள் பலரும் படத்தை பாராட்டினர். இப்படி இருக்கையில் படத்தின் முதல் நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
ரன்வீர் சிங் நடிப்பில் உருவாகி வெளியாகி உள்ள துரந்தர் 2 படத்திற்கு இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. படம் மொத்தம் 4 மணி நேரம் ஓடுகிறது, படத்திற்கு ஏ சான்றிதழ் தான் கொடுத்துள்ளார்கள் என்று தகவல்கள் வெளியானதும், படத்தில் ஆக்ஷன் காட்சிகள் இருக்கும். ஆனால் படம் நான்கு மணி நேரம் ஓடக் கூடிய அளவுக்கு, திரைக்கதை இருக்குமா என்ற கேள்வி பலருக்கும் இருந்தது.

ஆனால் படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு தரமான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டிருந்ததால் ரசிகர்கள் பலரும் படம் சலிப்பு தட்டவில்லை, படம் நான்கு மணி நேரமும் நன்றாக இருந்தது. படத்தில் நிறைய டிவிஸ்ட்கள் இருந்தது. அதே நேரத்தில் படத்தில் மாதவனும் ஒரு கதாநாயகன் தான் என்பது போல திரைக்கதை இருந்தது என்று எல்லாம் பாராட்டி வந்தார்கள்.
எதிர் விமர்சனங்கள்: படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு புறம் பாராட்டுகள் இருந்தாலும் மற்றொரு புறம் படத்திற்கு எதிர்ப்புகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக படம் பிரதமர் மோடி கொண்டு வந்த மோசமான திட்டங்களில் ஒன்றான பணமதிப்பிழப்பு திட்டத்தை ஆதரித்து பேசுகிறது, மேலும் பணமதிப்பிழப்புக்கு சப்பை கட்டு கட்டி உள்ளார்கள் என்று எல்லாம் இணையவாசிகள் பலரும் காட்டமாக விமர்சித்து வருகிறார்கள். அதுவும் முதல் பாகத்தில் 90 சதவீதம் உண்மை சம்பவம், 10 சதவீதம் புனையப்பட்ட கதையாக படத்தை உருவாக்கி இருந்தார். ஆனால் இரண்டாம் பாகம் 10 சதவீதம் மட்டுமே உண்மை சம்பவமாக இருக்கிறது 90 சதவீதம் புனையப்பட்ட கதையாக உள்ளது என்று விமர்சித்து வருகிறார்கள்.

வசூல் நிலவரம்: மேலும் படம் , பிரீமியர் ஷோவில் ரூபாய் 43 கோடிகள் வசூலித்தது என்றும் முதல் நாளில் ரூபாய் 102 கோடிகள் இந்திய அளவில் வசூலித்துள்ளது. இதுவரை ரூபாய் 145 கோடிகள் வசூலித்துள்ளது என்றும் மார்ச் 20ஆம் தேதி காலை 7 மணி நிலவரத்தில் சாக் நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. மேலும் இது இந்திய அளவிலான வசூல் தான். உலக அளவிலான வசூல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











