தீவிர பயிற்சி... தடகள வீராங்கனையாக ராஷ்மி ராக்கெட்டில் கலக்கும் டாப்ஸி
Recommended Video
சென்னை: தடகள வீராங்கனையாக தான் நடிக்கும் ராஷ்மி ராக்கெட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை டாப்ஸி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகை டாப்ஸி பண்ணு தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானாலும், தமிழில் போதுமான வாய்ப்பு கிடைக்காத காரணத்தால், பாலிவுட் பக்கம் தன் கவனத்தை திருப்பினார். இந்தியில் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதால், அங்கு இவரின் மார்கெட் உச்சத்துக்கு போய்க்கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு இந்தியில் இவர் நடித்த பிங்க் படம் அபார வெற்றி பெற்றதை அடுத்து, இவரின் சம்பளம் மேலும் கூடிக்கொண்டே போகிறது. இதனால் தான் நடிக்கும் படங்களையும் கவனமாக தேர்ந்தெடுக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் நடிக்கப் போகும் படம் ராஷ்மி ராக்கெட்.
ராஷ்மி ராக்கெட் படம், ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்து தடகள போட்டிகளில் வென்று சாதனை படைத்த ஒரு இளம் வீராங்கனையைப் பற்றிய உண்மைக் கதையாகும். இக்கதையை எழுதியவர் இயக்குநர் நந்தா பெரியசாமி. இவர் ஆர்யா நடித்த ஒரு கல்லூரியின் கதை, மாத்தி யோசி ஆகிய படங்களை இயக்கியவர்.
இக்கதையைத் தான் படமாக எடுக்க பிரபல பாலிவுட் இயக்குநர் ஆகாஷ் குரானா (Akarsh Khurana) முன்வந்துள்ளார். இக்கதை தற்போது பெரிய பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகிறது. இதில் தான் டாப்ஸி தடகள வீராங்கனையாக நடிக்கப்போகிறார்.

டாப்ஸி இதற்கு முன் சூர்ணா எனப்படும் இந்தி படத்தில் ஹாக்கி வீராங்கனையாக நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு மீண்டும் விளையாட்டு வீராங்கனையாக நடித்து வருவது பாலிவுட்டின் கவனம் டாப்ஸி பக்கம் திருப்பியுள்ளது, இதன் மூலம் டாப்ஸி பாலிவுட்டில் மிக பெரிய கதாநாயகியாக வளர்ந்து வருவது கண்கூடாக தெரிகிறது. இப்படத்திற்காக டாப்ஸி தீவிரமாக தடகள பயிற்சி எடுத்து வருகிறார். இது பற்றி தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் மிக பிஸியாக நடித்து வரும் டாப்ஸி சமீபத்தில் மும்மொழிகளிலும் நடித்து வெளியான கேம் ஓவர் எனும் த்ரில்லர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து அவர் அக்க்ஷை குமாருடன் இணைந்து நடித்த மிஷன் மங்கல்யான் படம் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றதால் டாப்ஸியின் சம்பளமும் சற்று உயர்ந்திருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படத்தை தயாரித்து வருவது ஆர்.எஸ்.வி.பி தயாரிப்பு நிறுவனம் இது யூடிவி தயாரிப்பு நிறுவனத்தின் ஓர் அங்கமாகும். இப்படத்தை இயக்கி வருவது பிரபலமான இயக்குனர் ஆகாஷ் குரானா என்பதால் இப்படம் பாலிவுட்டில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இவரின் முந்தைய படமான கர்வான் படம் மக்களிடையே சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்பதனால் இவரின் இப்படம் பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











