சைமா விருதுகளிலும் புறக்கணிக்கப்பட்ட ராட்சசன்: விஷ்ணு விஷால் குமுறல்
சென்னை: சைமா விருதுகள் விழாவிலும் ராட்சசன் படம் புறக்கணிப்பட்டுள்ளதையடுத்து விஷ்ணு விஷால் ட்விட்டரில் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
சைமா விருதுகள் வழங்கும் விழா தோஹாவில் நடைபெற்றது. அந்த விழாவில் சிறந்த தமிழ் படத்திற்கான விருது பரியேறும் பெருமாளுக்கு அளிக்கப்பட்டது. அந்த படத்தில் சிறப்பாக நடித்த கதிருக்கும் விருது கிடைத்தது.
சிறந்த நடிகருக்கான விருது அடங்கமறு படத்திற்காக ஜெயம் ரவிக்கும், குழந்தை நட்சத்திரத்திற்கான விருது அவரின் மகன் ஆரவுக்கும் கிடைத்தது.
விஷ்ணு விஷால்
விஷ்ணு விஷாலின் ராட்சசன் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு கொடுத்தார்கள். இருப்பினும் தேசிய விருதுகளை போன்றே சைமா விருதுகள் விழாவிலும் ராட்சசன் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த விஷ்ணு விஷால் தனது அதிருப்தியை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். ரசிகர்கள், பிரபலங்கள் என்று அனைவரும் கொண்டாடிய ஒரு படம் இரண்டு விருது விழாக்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

நியாயம்
விஷ்ணு விஷாலின் ட்வீட்டை பார்த்த யாரும் அவரை விளாசவில்லை. மாறாக அவரின் கோபமும், வருத்தமும் நியாயமானதே. நல்ல படத்தை இப்படி புறக்கணிப்பது சரி அல்ல. ராட்சசனுக்கு அங்கீகாரம் கிடைக்காதது வருத்தமாக தான் உள்ளது. ஆனால் மக்களாகிய நாங்கள் எங்களின் கைதட்டல்கள் மூலம் அங்கீகரித்துவிட்டோம் என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசியல்
தேசிய விருதில் மட்டும் அல்ல சைமா விருதிலும் ராட்சசன் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு பின்னால் அரசியல் இருக்கிறது. நீங்கள் உங்கள் படத்திற்கு போதிய விளம்பரம் செய்யவில்லை அண்ணா, அதனால் தான் தேர்வு செய்யவில்லை. நடுவர்கள் நல்ல படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று ராட்சசன் பட ரசிகர்கள் கூறியுள்ளனர்.
மக்கள்
ராட்சசன் படத்திற்கு மக்கள் கைதட்டல்கள் மூலம் விருது கொடுத்துவிட்டனர். இந்த படத்தை பார்த்துவிட்டு கட்டாயம் தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று நாங்கள் பலருக்கு பரிந்துரை செய்துள்ளோம். மக்கள் கொண்டாடிவிட்டோம். இந்த படத்திற்கு வேறு விருது தேவையில்லை. மக்களின் பாராட்டு தான் மிகப்பெரிய விருது என்று ரசிகர்கள் விஷ்ணு விஷாலுக்கு ஆறுதல் கூறியுள்ளனர். விஷ்ணு விஷாலை போன்றே ராட்சசன் பட ரசிகர்களும் அதிர்ச்சியில் தான் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











