பணத்திற்காக என்னை பயன்படுத்தியவர் ஆர்த்தி.. சர்ச்சைகளுக்கு நடுவே ஆவேசப்பட்ட ரவி மோகன்
சென்னை: நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ஆகியோருக்கு இடையில் விவாகரத்து பிரச்னை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ரவி மோகன் தனது தோழி, கெனிஷா உடன் நிகழ்ச்சி ஒன்றில் ஜோடியாக கலந்து கொண்டார். விவாகரத்து வழக்கு சென்று கொண்டிருக்கும் போது, அவர் தனது தோழியுடன் நிகழ்ச்சிகளுக்கு வருகிறார் என்று விமர்சனங்கள் எழுந்தது. இதற்கிடையில், ஆர்த்தி, ரவி மோகனின் பெயரைக் குறிப்பிடாமல் அவரை கடுமையாக விமர்சித்தார். இதனால் இணையவாசிகளும் கோலிவுட் வட்டாரமும் ரவி மோகனை கடுமையாக விமர்சித்தார்கள்.
இந்நிலையில் ரவி மோகன் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கை பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அதாவது, அவரது அறிக்கையில் ஆர்த்தி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவரது அறிக்கையில், " நாம் அமைதியாக இருப்பதால் என் தரப்பில் நியாயம் இல்லை என்று பலரும் நினைத்துக் கொண்டும் விமர்சித்துக் கொண்டும் உள்ளார்கள். வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால்தான் அமைதியாக இருந்தேனே தவிர, என் மீது தவறு இருக்கிறது என்ற எண்ணத்தில் இல்லை.

விளையாட்டு காரியம்: எனது கடந்த காலம் குறித்தோ, எனது திருமணம் குறித்தோ மற்றவர்கள் விமர்சித்து, அதன் மூலம் அவர்கள் விளம்பரம் தேடுவதை நான் விரும்பவில்லை. இது எனது வாழ்க்கை, இது நான் வலியில் இருந்து மீண்டு வரும் காலம், இது விளையாட்டு காரியம் அல்ல. அனைத்தும் சட்டத்தின் முன் உள்ளதால் விரைவில் உண்மை வெளிச்சத்திற்கு வரும் என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தை கண்ணியத்துடனும் மரியாதையுடன் கையாள வேண்டும் என்ற மனநிலையில் நான் இருக்கிறேன்.
பணம்: ஒரு மனிதனாக கடந்த சில ஆண்டுகளாக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், உணர்வுகள் ரீதியாகவும் மிகவும் சிரமங்களை நான் எதிர்கொண்டுள்ளேன். நான் பணத்திற்காக பயன்படுத்தப் பட்டுள்ளேன் என்பதைச் சொல்லவே கஷ்டமாக உள்ளது. என்னை கடந்த சில ஆண்டுகளாக எனது பெற்றோரைக் கூட சந்திக்க விடவில்லை. இப்படியான நிலையில் எனது திருமண உறவை தக்க வைத்துக் கொள்ள நான் மிகவும் போராடினேன், ஒரு கட்டத்தில் நான் மிகுந்த கனத்த இதயத்துடன் இந்த திருமணத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று முடிவு எடுத்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த அறிக்கையில் மேலும் பல விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்தது மட்டும் இல்லாமல், பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அனுதாபம்: மேலும் அவர், நான் திருமணத்தை விட்டு வெளியேறுகிறேன் என்றுதான் தெரிவித்துள்ளேன். எனது மனகளை விட்டு வெளியேறுவதாக அறிவிக்கவில்லை. எனது மகன்கள் எனது பெருமை மிகு அடையாளங்கள். நான் அவர்களுக்காகத்தான் எனது மீதி வாழ்க்கையை வாழப்போகிறேன். எனது மகன்களை பொது வெளியில் காட்டி, அதன் மூலம் அனுபாங்களை பெற முயற்சிக்கிறார்கள். உண்மை என்பது கடவுளுக்குத் தெரியும். நான் எனது வாழ்க்கையை முதல் படியில் இருந்து தொடங்க தயாராகிவிட்டேன். ஃபீனிக்ஸ் பறவையைப் போல் மீண்டு வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. கடவுள் எனக்கு அந்த நம்பிக்கையைக் கொடுப்பார். என்னை அவர் வழிநடத்துவார் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த அறிக்கை பலருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வ்கையில் உள்ளது.
மேலும் அவர் அந்த அறிக்கையில், “விவாகரத்து அறிவித்து, நீதிமன்றத்தில் முறையிட்ட பின்னர், நமது நாட்டின் சட்டத்தின்படி எனது குழந்தைகள் அவரது தாயாருடன் இருந்து வருகிறார்கள். விவாகரத்து அறிவித்து ஒரு மாதத்திற்கு பின்னர் கிறிஸ்துமஸ் வந்தது. அப்போது நான் குழந்தைகளை சந்திக்க வேண்டும் என்று கேட்டதற்கு என்னை சந்திக்க விடவில்லை. ஆனால் எனது குழந்தைகள் சென்ற கார் விபத்துக்கு உள்ளானது என்ற தகவல் கேட்டு நான் மிகவும் பதறிப்போனேன். அவர்கள் சென்ற கார் எனது பெயரில் இருப்பதால், இன்சூரன்ஸ் செய்வதற்கு நான் கையெழுத்து போட வேண்டி இருந்தது. அதற்கு மட்டும் ஆர்த்தி தரப்பில் இருந்து அழைப்பு வந்தது. நான் இந்த சம்பவத்தில் இருந்து ஒரு விஷயத்தைக் கற்றுக் கொண்டேன்.
பரிதாபத்தை உருவாக்க வேண்டாம்: மேலும், எனது விவாகரத்தில் எனது குழந்தைகளை பொது வெளியில் காட்சிப் பொருளாக மாற்றுவதை நான் விரும்பவில்லை. அவர்களை பொது வெளியில் காட்டி, பரிதாபத்தை உருவாக்க வேண்டாம். நான் எனது திருமண உறவில் இருந்து தான் வெளியேறுகிறேனே தவிர எனது குழந்தைகளை விட்டு பிரிய மாட்டேன். அவர்கள் எனது பெருமை மிக்க அடையாளங்கள். நான் எனது வாழ்க்கையை அவர்களுக்காகத்தான் வாழப்போகிறேன். மேலும் ஒரு தைரியமான பெண் என்றால் நமது நாட்டு சட்டம் வழி காட்டுவதை பின்பற்ற வேண்டும். ஆனால் அவர்கள் ( ஆர்த்தி) செய்வது எனது மகன்களை பொது வெளியில் காட்டி, அவர்களை பரிதாபமானவர்களாக காட்டி வருகிறார்கள்.
அன்பினால்: நான் எனது முன்னாள் மனைவிக்கு, எனது சம்பாத்தியம், சொத்து , சமூக வலைதளப் பக்கங்கள், எனது வாழ்க்கையின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அனைத்து உரிமைகளை அன்பின் பேரால் நான் கொடுத்திருந்தேன். ஆனால் அவர், எனது அன்பை புரிந்து கொள்ளவில்லை. மாறாக அவர் என்னை பண ரீதியாக பெரும் சிக்கலில் சிக்க வைத்தார். எனது பெற்றோர்களிடம் இருந்து என்னைப் பிரித்தார். எனது தந்தையிடம் என்னால் ஒரு மகன் போல இருக்க முடியாத சூழலை ஏற்படுத்தினார். எனது சம்பாத்தியத்தில் இருந்து எனது பெற்றோர்களுக்கு ஒரு குண்டுமணி அளவிலான பணத்தைக் கூட செலவு செய்ய முடியாத அளவுக்கு கடந்த 5 ஆண்டுகளாக என்னை நடத்தினார். இப்படியான கொடுமைகளை அனுபவித்த நான் இப்போதும் அமைதியாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னாள் மனைவி: அவரது இந்த பதிவு பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது அறிக்கையில் ஆர்த்தியின் பெயரை அவர் எங்கும் குறிப்பிடவில்லை. மாறாக எனது முன்னாள் மனைவி, முன்னாள் மனைவியின் அம்மா, முன்னாள் மனைவியின் குடும்பம் என்றுதான் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில் மகன்கள் குறித்து குறிப்பிடும்போது, எனது சொந்த மகன்கள் என்றும் தனது பெற்றோர்கள் குறித்து குறிப்பிடும்போது, தனது சொந்த பெற்றோர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். ரவி மோகனிடம் இருந்து ஐந்து பக்கத்திற்கு பதில் அறிக்கை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அப்படி இருக்கும்போது அவரது இந்த அதிரடியான அறிக்கை பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











