காயங்கள்.. சோகங்கள்.. கெனிஷாவின் இன்ஸ்டா பதிவு.. கடுப்பான ஃபேன்ஸ்!
சென்னை: நடிகர் ரவி மோகன், ஆர்த்தி ரவி பிரிவுக்கு பாடகி கெனிஷா தான் காரணம் என்று இணையத்தில் பலரும் அவரை வசைபாடி, கடுமையான வார்த்தைகளால் திட்டி தீர்த்து வருகின்றனர். அதற்கு, கெனிஷாவும் சளைக்காமல் தனது இன்ஸ்டாகிராமில் தக்க பதிலடி கொடுத்து வருகிறார். தற்போது அவர், சத்தங்களுக்கு இடையே...புதிய தொடக்கத்தை நோக்கி' என ஒரு பதிவினை ஷேர் செய்துள்ளார். அது தற்போது டிரெண்டாகி வருகிறது.
நடிகர் ரவி மோகன் அண்மையில் தனது மனைவியை ஆர்த்தியை விட்டு பிரிவதாக அறிக்கை வெளியிட்டு பிரிந்தார். இது பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், ரவி மோகன் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, அறிக்கை வெளியிட்ட ஆர்த்தி, என்னை கேட்காமல் அவராக எடுத்த முடிவு இந்த முடிவில் எனக்கு உடன்பாடு இல்லை என கூறியிருந்தார். இப்படி, ரவியின் விவாகரத்து சர்ச்சை ஒரு பக்கம் சென்று கொண்டிருக்க, பாடகி கெனிஷாவுடன் ரவிக்கு தொடர்பு இருப்பதாகவும், கோவாவில் இருவரும் வேகமாக கார் ஓட்டிய போது அபராதம் கட்டியதற்கான ரசீகள் இணையத்தில் வெளியானது. இதனால், ரவி மோகன் மற்றும் ஆர்த்தி குடும்பத்தை பிரித்தது கெனிஷா தான் என பல விதமான செய்திகள் இணையத்தில் வெளியானது
ஜெயம் ரவி: இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரவி மோகன், கெனிஷாவை இந்த விஷயத்தில் தேவையில்லாமல் இழுக்க வேண்டாம் என்றும், அவர் பலரின் உயிரை காப்பாற்றிய ஹீலர், அவரும் நானும் வரும் காலத்தில் ஹீலர் மையம் வைக்க இருக்கிறோம். இதை தடுப்பதற்காகத்தான் இப்படி தேவையில்லாததை பரப்புகிறார்கள் என்றார். மேலும், தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிடாதீர்கள் என்று பேசி இருந்தார். இதையடுத்து, ஜெயம் ரவி ஆர்த்தியை பிரிய ஆர்த்தியின் அம்மா தான் காரணம், அவர் தான் ரவியை அடிமையாக வைத்து இருந்தார் என்ற செய்திகள் வெளிவந்தது.
கெனிஷாவுடன் ஜோடியாக: இதன் பின் ரவி மோகன், ஆர்த்தி இருவரின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த போது, வழக்கை விசாரித்த நீதிமன்றம், இருவரையும் மனம் விட்டு பேச அறிவுரை வழங்கியது. இதற்காக இருவரும் நீதிமன்றத்தின் ஆஜரான நிலையில் சமாதான பேச்சு வார்த்தை தோல்வி அடைந்தது. அதையடுத்து, இவர்களின் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் போதே, நடிகர் ஜெயம் ரவி, பாடகி கெனிஷாவுடன் தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகளின் திருமணத்தில் கலந்து கொண்டார். அந்த விழாவிற்கு இருவரும் புதிதாக திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் போல, கைகளை கோர்த்துக்கொண்டு வந்து இருந்தனர்.

கொந்தளித்த ஆர்த்தி: இந்த வீடியோவை பார்த்து கொந்தளித்து போன ஆர்த்தி, தனது குழந்தைகளை ரவி மோகன் பார்த்துக்கொள்வதில்லை என்றும், தான் வாழும் வீட்டை காலி செய்யுமாறு அவரிடமிருந்து எவிக்ஷன் நாேட்டிஸ் வந்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், கடந்த ஒரு வருடமாக நான் குழந்தைகளுக்காக அமைதியாக இருந்துவிட்டேன், இனியும் அமைதியாக இருக்க முடியாது, என் குழந்தைகள் சிறியவர்கள் அவர்களுக்கு சட்ட பிரச்சனை தெரியாது, ஆனால், தந்தையால் கைவிடப்பட்டுவிட்டோம் என்பது தெரியும். தந்தை என்பது வெறும் பட்டம் இல்லை அது பொறுப்பு என கண்ணீருடன் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
பொன்முட்டையிடும் வாத்து: அதன் பின் ரவி மோகன் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், இத்தனை வருடமாக என்னுடைய முதுகில் குத்தப்பட்டு இருந்தேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக என் அப்பா, அம்மாவுக்கு ஒரு பைசா கூட கொடுக்கவிடவில்லை. என்னை கணவனாக நினைக்கிவில்லை. பொன் முட்டையிடும் வாத்து போலவே அவர் நடத்தினார்கள் என்றார். இதைத்தொடர்ந்து, ஆர்த்தியின் அம்மா சுஜாதா விஜயகுமார், நான் அவரை என் மகனாக நினைத்தேன், என் மகள் அவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற ஆசைப்படுகிறேன் என்று பதில் அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
சோகத்தின் நடுவே மனம் பாடுகிறது: இப்படி இவர்களின் குடும்ப விவாகாரம் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இதற்கு எல்லாம் காரணம் பாடகி கெனிஷா தான்... நல்ல குடும்பத்தை கெடுத்துவிட்டாள் என இணையவாசிகள் கெனிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை கட்டபடி விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாத கெனிஷா, தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார். அதில், பெரிய சத்தங்களுக்கு மத்தியில் அமைதியான நம்பிக்கை காத்திருக்கிறது. இசையை பிடித்துக் கொண்டு நிற்கிறேன்.. காயங்களை பாடங்களாய் ஏற்கிறேன்.. ஆழமான சோகத்தின் நடுவே மனம் பாடுகிறது. நாளைய விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











