Ravi Mohan: ஆர்த்தி குறித்த அவேச பேச்சு.. பகிரங்க மன்னிப்பு கேட்ட ரவி மோகன்
சென்னை: நடிகர் ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில், இவர்களது விவாகரத்து வழக்கு சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த சில மாதங்களாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகி வந்த நிலையில், தற்போது ரவி மோகன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இடையேயான குடும்பப் பிரச்சனை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு முடியும் வரை இரு தரப்பினரும் ஒருவரைப் பற்றி ஒருவர் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக அவ்வப்போது பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்ததால், ரசிகர்கள் மத்தியிலும் இந்த விவகாரம் அதிக கவனத்தை பெற்றது.

இப்படி இருக்கும் நிலையில், ரவி மோகனின் தோழியும் பாடகியுமான கெனிஷா தொடர்பாக சமூக வலைதளங்களில் எதிர்மறையான கருத்துக்கள் அதிகரித்ததாக கூறப்பட்டது. இதையடுத்து, "நான் ரவியை பிரிந்து செல்கிறேன். சென்னையை விட்டும் வெளியேறி விட்டேன்" என்று கெனிஷா தெரிவித்ததார். இந்த சம்பவம் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆவேச பேச்சு: இதனைத் தொடர்ந்து ஊடகங்களை சந்தித்த ரவி மோகன், தனது ஆதங்கத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், "சைபர் அட்டாக்கால் ஒரு நல்ல பெண்ணை ஊரை விட்டு அனுப்பி விட்டீர்கள்" என்று கூறியதோடு, ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினரால் தான் சந்தித்த சிரமங்கள் குறித்தும் கண்ணீர் மல்க பேசினார். மேலும், தனது குடும்ப வாழ்க்கை சீர்குலைய ஒரு பிரபல நடிகை காரணமாக இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.

ஆர்த்தி ரவி: இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறி ரவி மோகன் ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளதாக கூறி ஆர்த்தி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தனது செயலுக்காக மன்னிப்பு கோரி பொது அறிவிப்பு வெளியிட தயாராக இருப்பதாக ரவி மோகன் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மன்னிப்பு: இந்த நிலையில் தற்போது ரவி மோகன் தரப்பில், "திருமண தகராறு தொடர்பான கருத்துக்களை பொதுவெளியில் தெரிவித்ததற்காகவும், எனது கருத்துகளால் மனவேதனை அடைந்த அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பான ஆவணமும் அவரது தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பரபரப்பாக பேசப்பட்டு வந்த இந்த விவகாரத்தில், ரவி மோகனின் பகிரங்க மன்னிப்பு புதிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. இதனால் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மற்றும் நீதிமன்றத்தின் நிலைப்பாடு குறித்து தற்போது பலரும் எதிர்பார்ப்புடன் கவனம் செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications