நல்ல பெண்.. பாதுகாப்பாக உணர்ந்தேன்.. பராசக்தி ஆடியோ லான்ச்சில் பெர்சனலை இழுத்த ரவி மோகன்?
சென்னை: சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் பராசக்தி படத்தை அனைவருமே எதிர்பார்த்திருக்கிறார்கள். படத்தின் கதை முக்கியமான விஷயத்தை பற்றி பேசியிருப்பதால் எழுந்திருக்கும் எதிர்பார்ப்பு இது. இதில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ரவி மோகன் நடித்திருக்கிறார். முதன்முறையாக அவர் வில்லனாக நடித்திருப்பதால் இதுவும் படத்தின் ஹைப் ஏறுவதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனை வைத்து சுதா கொங்கரா இயக்கியிருக்கும் பராசக்தி படம் ஜனவரி பத்தாம் தேதி வெளியாகிறது. ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தை மையப்படுத்தி இந்தப் படத்துக்கான கதையையும், திரைக்கதையையும் எழுந்தியிருக்கிறார் சுதா. சிவகார்த்திகேயன் செழியன் என்ற கதாபாத்திரத்தையும், அதர்வா சின்னத்துரை என்ற கேரக்டரையும், ரவி மோகன் திருநாடன் என்ற கேரக்டரையும் ஏற்றிருக்கிறார்கள்.
ரவி மீது கூடுதல் ஹைப்: இதுவரை ரவியை சாக்லேட் பாயாகவும், ஆக்ஷன் ஹீரோவாகவும் ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். ஆனால் வில்லனாக பார்த்ததில்லை. இப்படத்தில் வில்லனாக எப்படிப்பட்ட நடிப்பை அவர் கொடுத்திருக்கிறார் என்ற ஹைப்பும் கூடுதலாக எகிறியிருக்கிறது. படத்தை ஒருசிலர் பார்த்துவிட்டதாக தெரிகிறது. அவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம், சிவா ஸ்கோர் செய்திருக்கும் அளவுக்கு ரவியும் இதில் பட்டாசாக இருக்கிறார் என கூற தொடங்கியிருக்கிறார்கள்.

ரவி மோகன் பேச்சு: இந்நிலையில் பராசக்தி ஆடியோ வெளியீட்டு விழாவில் ரவி பேசிய விஷயம் சில கேள்விகளை ரசிகர்களிடம் கிளப்பியிருக்கிறது. அவர் விழாவில் பேசுகையில், "பராசக்தி படம் ஒரு தங்கம். இது சாதாரணமான படம் கிடையாது. அனைவருமே கடின உழைப்பை கொட்டியிருக்கிறார்கள். நான் படம் பார்த்துவிட்டேன். அதனால்தான் சந்தோஷமாக இருக்கிறேன். நீங்களும் படம் பார்த்துவிட்டு சந்தோஷமாக இருங்கள். இது சிவகார்த்திகேயனுக்கு 25ஆவது படம்.
நானும் இருப்பது சந்தோஷம்: அவரது 25ஆவது படத்தில் நானும் இருப்பது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது. அவர் இன்னும் பல பல பெரிய வெற்றிகளை பெற வேண்டும். ரசிகர்களாகிய நீங்கள் அவருடன் ஒட்டிக்கொண்டே இருங்கள். இதைவிட பெரிய ஆடிட்டோரியத்தில் அவர் இருக்கும் காலம் வரும். ஜிவி பிரகாஷுக்கு இது 100ஆவது படம். ஜிவி இதை நீங்கள் முதல் படமாக நினைத்துக்கொள்ளுங்கள். சீக்கிரம் அடுத்த நூறு படங்களை தாருங்கள்.
நல்ல பெண்: சுதா கொங்கராவை பற்றி சொல்ல வேண்டும். ஒரு ஷூட்டிங் ஸ்பாட்டிலோ அல்லது ஒரு இடத்திலோ நல்ல ஆண்கள் இருக்கும்போது எப்படி பெண் பாதுகாப்பாக உணர்வாரோ; அதுமாதிரி ஒரு நல்ல பெண் சுதா கொங்கரா இருக்கும்போது நான் பாதுகாப்பாக உணர்ந்தேன். எந்த பிரச்னையும், ஈகோவும் இல்லை. எனக்கு இந்த கேரக்டரை கொடுத்ததற்கு நன்றி" என்றார். அவரது இந்தப் பேச்சை பார்த்த ரசிகர்களோ, 'ஒரு நல்ல பெண்' என்று அழுத்தி சொல்கிறார் ரவி. இதன் மூலம் தன்னுடைய பெர்சனல் வாழ்க்கையில் கடந்த காலத்தில் நடந்த சில நிகழ்வுகளைத்தான் மறைமுகமாக சுட்டிக்காட்டுகிறாரோ என்று கேள்வியை எழுப்பிவருகிறார்கள். முன்னதாக, அவர் தான் திருமணம் செய்திருந்த ஆர்த்தியை பிரிந்து வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











