என்னது விடுதலை படம் திருட்டு கதையா?.. கிளம்பிய பஞ்சாயத்து.. இது புதுசா இருக்கே
சென்னை: இந்திய திரையுலகில் முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநராக இருக்கிறார் வெற்றிமாறன். பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்த அவர் இதுவரை ஆறு படங்கள் இயக்கியிருக்கிறார். ஆறு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. மேலும் இரண்டு படங்களுக்கு தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். தற்போது அவரது இயக்கத்தில் விடுதலை 2 உருவாகிவருகிறது. இந்தச் சூழலில் விடுதலை படம் திருட்டு கதை என்ற புதிய சர்ச்சையை இயக்குநர் ரவிதம்பி என்பவர் கிளப்பியிருக்கிறார்.
இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். அவரது முதல் படமான பொல்லாதவன் கமர்ஷியல் படமாக உருவாகியிருந்தது. ஆனால் அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய ஆடுகளம் ஐந்துக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை அள்ளியது. அந்தப் படத்திலிருந்து வெற்றிமாறன் தவிர்க்க முடியாத இயக்குநராகிவிட்டார். குறிப்பாக தான் இயக்கும் ஒவ்வொரு படத்தின் மூலமும் சமூகத்தில் பெரும் விவாதத்தை கிளப்பும் என்பது குறிப்பிடத்தக்கது. அசுரன் படம் பஞ்சமி நிலம் பற்றிய விவாதத்தை கிளப்பியது.

தவறாக சித்தரித்த வெற்றிமாறன்?: அதற்கு அடுத்ததாக அவர் இயக்கிய விசாரணை, வடசென்னை ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் வடசென்னை படம் வட சென்னைவாசிகளை தவறாக சித்தரித்துவிட்டதென்று விமர்சனமும் எழுந்தது. ஆனால் அதெல்லாம் இல்லை சரியாகத்தான் பேசியிருக்கிறார் என்றும் வெற்றிமாறனின் ரசிகர்கள் ஒருபக்கம் பேசினர்.
விடுதலை: தொடர்ந்து அவர் இயக்கிய அசுரன் படமும் தேசிய விருதை பெற்றது. அதனையடுத்து விடுதலை படத்தை இயக்கினார். இதற்கிடையே வாடிவாசல் படத்தை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் போட்ட ப்ளானில் மாற்றம் ஏற்பட விடுதலை படமானது இரண்டு பாகங்களாக உருவானது. இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
விடுதலை 2: இந்தச் சூழலில் விடுதலை படத்தின் இரண்டாம் பாக ஷூட்டிங் ஏற்கனவே முடிந்தாலும் பாகம் ஒன்று பெற்ற விமர்சனம் இதில் வரக்கூடாது என்பதற்காக படத்தில் மேலும் சில காட்சிகளை படமாக்குகிறார் வெற்றி. அதற்கான வேலைகள் மும்முரமடைந்துள்ளன. இதில் விஜய் சேதுபதிக்கு மஞ்சு வாரியர் ஜோடியாக நடிக்கலாம் என கூறப்படுகிறது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருகின்றன. அடுத்ததாக வாடிவாசல், வடசென்னை 2 ஆகிய படங்களை இயக்குகிறார் வெற்றிமாறன்.
விடுதலை திருட்டு கதை?: இந்நிலையில் விடுதலை படம் பற்றிய புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியிருக்கிறது. அதாவது கடந்த 2012ஆம் ஆண்டு வாச்சாத்தி என்ற படத்தை இயக்கிய ரவிதம்பி என்பவர் விடுதலை கதை தன்னுடையது என்று தெரிவித்திருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், "விடுதலை திரைப்படத்தின் கதை என்னுடைய கதை. அதை திருடித்தான் வெற்றிமாறன் விடுதலை படத்தை எடுத்தார்.
1992ஆம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து வாச்சாத்தி படத்தை எடுத்தேன். அதனைத்தான் திருடி விடுதலை படத்தை எடுத்திருக்கின்றனர். அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தேன். ஆனால் பெரிய அதிகார வர்க்கம் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார். ரவிதம்பியின் இந்தக் குற்றச்சாட்டில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனெனில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற கதையை வைத்துதான் வெற்றிமாறன் விடுதலையை உருவாக்கினார் என பலரும் சொல்வது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











