பத்து ஏக்கர் நிலமோசடி... சிஎம் செல்லில் எஸ்எஸ்ஆர் மகள் புகார்!
சென்னை: தனக்கு சொந்தமான பத்து ஏக்கர் நிலத்தில் மோசடியாக அடுக்குமாடிக் கட்டடம் கட்டியதாக ரியல் எஸ்டேட்காரர் மீது நடிகர் எஸ்எஸ்ஆர் மகள் புகார் அளித்துள்ளார்.
மறைந்த லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். மகள் லட்சுமி. இவர் சென்னை கோட்டையில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் நில மோசடி புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கூடுவாஞ்சேரியில் எனக்கு சொந்தமான 10 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் ஆர்.ஆர்.பி. ஹவுசிங் பத்மநாபன் என்பவர் என்னை ஏமாற்றி அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டி வருகிறார்.
இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்ட மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருந்த போதிலும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தவேண்டும் என சி.எம்.டி.ஏ.வில் புகார் அளித்து தடை ஆணையும் பெற்றுள்ளேன்.
மேலும் பத்மநாபன் மீது சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே பத்மநாபனை கைது செய்ய வேண்டும். நிலத்தை மீட்டுத் தர வேண்டும்.
அவருக்கு உடந்தையாக இருக்கும் திருப்போரூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவி மற்றும் திருப்போரூர் சார் பதிவாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications