நிஜப் பாம்பு மேடையேறிய 'ஆடிய' விடாயுதம் இசை வெளியீட்டு விழா!
பேய்க்கும் பாம்புக்கும் சண்டை என்ற அபார யோசனையில் உருவாகியுள்ள விடாயுதம் இசை வெளியீட்டு விழாவில் நிஜப் பாம்பு ஒன்றை மேடை ஏற்றி ஆட வைத்தார்கள்.
நாகமானிசி என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் 'ஸ்லம்டாக் மில்லியனர் ' புகழ் தன்வி லங்கோர் நாயகியாக நடித்துள்ளார். ராம் சரவணன் நாயகனாக நடித்துள்ளார்.

ஸ்ரீநாகராஜா சர்ப்ப யக்ஷி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று ஆர்கேவி ஸ்டுடியோவில் நடைபெற்றது.
அபிராமி ராமநாதன்
விழாவில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன் பேசும் போது, "ஜாதி, மத, இன, மொழி, ஏழை, பணக்காரன் என்கிற வேறுபாடு இல்லாத உலகம் திரைப்படக் கலையுலகம்தான். இந்த சினிமா உயிருடன் இருப்பது சிறு முதலீட்டுப் படங்களால்தான். சினிமா உயிருடன் நன்றாக இருக்க சிறிய படங்கள் நிறைய வர வேண்டும்.
பாம்புன்னா எனக்கு பயம்
'விடாயுதம்' படத்தைச் சிறு முதலீட்டுப் படமாக நாகமானிசி எடுத்திருக்கிறார். 'விடாயுதம்' ஒரு பாம்புப் படம். நான் பாம்புப் படம் பார்க்க மாட்டேன். பயப்படுவேன்.

சிறு படங்கள்
சிறு முதலீட்டுப் படங்கள் வெளியானால்தான் சினிமா நன்றாக இருக்கும். தியேட்டர்களில் அதிகம் வெளிவருபவை சிறு முதலீட்டுப் படங்கள்தான். அது மட்டுமல்ல சினிமாவை நம்பித்தான் டிவிக்கள் உள்ளன. டிவி க்களில் 90 சதவிகிதம் சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள்தான் வருகின்றன. சினிமாவை நம்பி பத்து லட்சம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
அவர்கள் எல்லாரும் நன்றாக இருக்க நிறைய சிறு முதலீட்டுப் படங்கள் வரவேண்டும் இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்,'' என்றார்.
ஜாகுவார் தங்கம்
தயாரிப்பாளர் சங்கம் கில்டு அமைப்பின் செயலாளர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, "பாம்பு இடம்பெறும் படங்கள் நன்றாக ஓடும் என்கிற நம்பிக்கை இருக்கிறது," என்றவர், ''தமிழ்நாடு முழுக்க வெள்ளமாக இருக்கிறது. திரைப்படத்தின் அனைத்து துறையினரும் உதவ வேண்டும். என் சார்பில் நான் ஒரு லட்சம் வழங்குகிறேன். 50 ஆண்டுகளாக சினிமா சார்ந்தவர்களே ஆட்சி செய்து வருகிறார்கள். ஆனால் இதுவரை திரையுலகம் மக்களுக்கு நிதி உதவி செய்யவில்லை. இனிமேலாவது திரையுலகம் ஒட்டு மொத்தமாக வந்து உதவ வேண்டும். நம் மக்களை நாம் காப்பாற்றாமல் நாம் உயிருடன் இருந்து என்ன பயன்?," என்றார்.
ஆடியோ வெளியீடு
விழாவில் ஆடியோவை அபிராமி ராமநாதன். இயக்குநர் தருண் கோபி, இயக்குநர் ராஜ்கபூர் வெளியிட பவர்ஸ்டார் சீனிவாசன், நடிகர் பிரஜன்,இயக்குநர் ஏ.வெங்கடேஷ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மேடையில் நிஜப் பாம்பு
படத்தின் நாயகன் ராம் சரவணன், நடிகர்கள் செந்தில், ப்ரஜின், உதயராஜ், நாயகி கமலி, தயாரிப்பாளர்கள் ஜே. கே.ஆதித்யா, ஆர்.என்.ஸ்ரீஜா, மும்பை ரவிச்சந்திரன் ராஜு, இசையமைப்பாளர் மிதுன் ஈஸ்வர், சினிமா மக்கள் தொடர்பாளர்கள். டைமண்ட் பாபு, விஜயமுரளி, பெரு. துளசிபழனிவேல் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.
விழாமேடையில் நிஜமான நல்லபாம்பு மேடை அரங்க அமைப்பில் இடம் பெற்றிருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.


Click it and Unblock the Notifications











