Varma: 'இது அர்ஜுன் ரெட்டியா இல்ல பிட்டுப்படமா'... பாலாவின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி!
பாலாவின் வர்மா கைவிடப்பட்டதன் பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு விஷயங்கள் தெரியவந்துள்ளன.
Recommended Video

சென்னை: இயக்குனர் பாலாவின் வர்மா திரைப்படம் கைவிடப்பட்டது ஏன் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் வர்மா என்ற பெயரில் இயக்குனர் பாலா எடுத்தார். நடிகர் விக்ரமின் மகன் துருவ் அறிமுகமாகும் படம் என்பதால் தான் பாலாவை இயக்க வைத்தனர்.
ஆனால் இந்த படம் ரிலீசுக்கு தயாரான நிலையில், படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டது. இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளில் தங்களுக்கு திருப்தி இல்லை என்பதால், வேறொரு இயக்குனரை வைத்து எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தையும் மீண்டும் புதிதாக எடுக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

வர்மாவின் பின்னணி
வழக்கமாக இயக்குனர் பாலாவிடம் தான் தயாரிப்பாளர்கள் சிக்கிக்கொண்டு அவதிப்படுவார்கள். ஆனால் வர்மா பட விவகாரத்தில் பாலா தான் தயாரிப்பாளரிடம் சிக்கிக்கொண்டுவிட்டார். ஒரு தயாரிப்பாளர் இயக்குனர் பாலாவை தூக்கி எறிந்த சம்பவம் தமிழ் திரைத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பின்னணி தகவல்கள் தெரியவந்துள்ளது.

பாலாவின் சேது
விக்ரமின் திரை வாழ்க்கைக்கு பெரும் அஸ்திவாரமாகவும், திருப்புமுனையாகவும் அமைந்த படம் பாலா இயக்கிய சேது. எனவே பாலா மீது விக்ரமுக்கு தனி பாசம் உண்டு. இதனால் தான் மீண்டும் அவர் இயக்கிய பிதாமகன் படத்தில் நடித்தார். அந்த படமும் அவருக்கு நல்ல பெயரை சம்பாதித்து தந்தது. ஆனால் அதன் பிறகு இருவரும் சேர்ந்து படம் பண்ணவில்லை.

விக்ரமின் ஆசை
இந்நிலையில் தனது மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த நினைத்த விக்ரம், தனது ஆஸ்தான இயக்குனரான பாலாவின் படத்தின் மூலம் தான் அது நடைபெற வேண்டும் என உறுதியாக இருந்தார். இதனால் தான் வர்மா படத்துக்கு பாலாவை கமிட் செய்தார்கள்.

எனக்கு ரீமேக் வராது
ஆனால் ஆரம்பம் முதலே அதில் ஒரு சிக்கல் இருந்தது. ரீமேக் படத்தை தன்னால் இயக்க முடியாது என பாலா திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனால் விக்ரம் மற்றும் தயாரிப்பாளர் தரப்பினர் அர்ஜுன் ரெட்டி படத்தை ரீமேக் செய்வதில் உறுதியாக இருந்தனர். இதனால் வேறு வழியில்லாமல் தான் படத்தை இயக்க பாலா ஒப்புக்கொண்டார்.

தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி
வர்மா படத்தை பார்த்த தயாரிப்பாளருக்கு மிகுந்த அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் அர்ஜுன் ரெட்டி படத்துக்கும் வர்மாவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையாம். இது வேறு ஏதோ ஒரு படம் போல் இருந்திருக்கிறது. அதுவும் சரியான திரைக்கதையில் இல்லாமல் ஏனோ தானோவென பாலா எடுத்து வைத்துள்ளதாக தயாரிப்பாளர்கள் குற்றஞ்சாட்டினர்.

இது ஆபாச படமா!
அதுமட்டுமல்ல, வர்மா ஆபாச படம் போல் இருக்கிறது என்பதும் தயாரிப்பாளர்களின் குற்றச்சாட்டு. ஒரிஜினல் படத்தில் படுக்கையறை காட்சிகளும், லிப்லாக் காட்சிகளும் அதிகம் இருக்கும் தான். அதற்காக இப்படி அதை மட்டுமா எடுத்து வைப்பது என பாலாவிடம் தயாரிப்பாளர்கள் கேட்டனர். இதற்கு சரியாக பதில் சொல்லாத பாலா, படத்தில் எந்த காட்சியையும் மாற்றக் கூடாது என உறுதியாக தெரிவித்துவிட்டார்.

ரிலீஸ் செய்ய மறுப்பு
இதனால் கடுப்பான தயாரிப்பாளர் தரப்பு, படத்தை ரிலீஸ் செய்யலாமா வேண்டாமா என்ற ஆலோசனையில் இறங்கியது. கடந்த நான்கு நாட்களாக இதுதொடர்பாக பஞ்சாயத்து நடந்தது. அப்போது தான் ரீமேக் படம் எடுக்க மாட்டேன் என முன்னமே தெரிவித்ததை பாலா சுட்டிக்காட்டியிருக்கிறார். ஒரு கட்டத்தில் வேறு வழியே இல்லாமல், படத்தில் இருந்து விலகிக்கொள்வதாக பாலா தெரிவித்துவிட்டார்.

மீண்டும் படப்பிடிப்பு
இதையடுத்து தான் வர்மா படத்தை வேறொரு இயக்குனரை வைத்து மீண்டும் படம்பிடிக்க இ4 எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 30 நாட்களில் 4 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படத்தை முடிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த விவகாரத்தால் பாலா படம் மூலம் தனது மகன் ஹீரோவாக அறிமுகமாக வேண்டும் என்ற விக்ரமின் ஆசை நிறைவேறாமல் போய்விட்டது.


Click it and Unblock the Notifications











