மறைந்த பிரபல வில்லன் நடிகர் சிலையின் கையில் இருந்து வடிந்த ரத்தம்.. கேரளாவில் பரபரப்பு!
மறைந்த நடிகர் கலாபவன் மணியின் சிலையில் இருந்து வடிந்த ரத்தம் போன்ற திரவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவனந்தபுரம்: கலாபவன் மணியின் சிலையில் இருந்து ரத்தம் வடிந்ததாக பரவிய புகைப்படத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நாயகன், வில்லன் மற்றும் குணச்சித்திர வேடம் என சுமார் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் கலாபவன் மணி. இவர் கடந்த 2016ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார்.
முதலில் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. பின்னர் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, அது பற்றிய விசாரணையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க, கடந்த வருடம் கலாபவன் மணியின் சொந்த ஊரில் அவருக்கு குடும்பத்தாரும், ரசிகர்களும் சேர்ந்து சிலை ஒன்றை வைத்தனர்.

ரத்தம்?
இந்நிலையில் அந்த நிலையில் தற்போது சிவப்பு நிறத்தில் ரத்தம் வடிவதாக சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. வைரலாகிய அந்தப் புகைப்படங்களால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தத் தகவல் அச்சிலை செய்தவரின் காதுகளையும் எட்டியது.

நேரில் ஆய்வு:
அவர் உடனடியாக அந்தச் சிலையை நேரில் வந்து ஆய்வு செய்தார். அதில், சிலையில் இருந்து சிவப்பு நிறத்தில் வெளிவந்த திரவம் ரத்தம் இல்லை என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர் அளித்த விளக்கத்தில், ‘சிலையின் உள்ளே இரும்பு ராடுகள் உள்ளன.

கேரள வெள்ளம்:
கடந்தாண்டு கேரளாவில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தால், உள்ளிருக்கும் அந்த ராடுகள் துருப்பிடித்துள்ளன. தற்போது வெளியில் இருக்கும் பைபர் வெயிலுக்கு உருக ஆரம்பித்துள்ளது. இதனால், துருவும் அதனுடன் சேர்ந்து சிவப்பு நிறத்தில் திரவம் வெளிவந்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

குழப்பத்திற்கு பதில்:
சிற்பியின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து, இந்த சிலை விவகாரத்தில் மக்களுக்கு ஏற்பட்ட குழப்பத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது. இதனால் அவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஆனாலும், ஆரம்பத்தில் அப்படி ஒரு புகைப்படத்தை பார்த்ததால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











