பொன்னியின் செல்வன் 2 அப்டேட்.. களத்தில் இறங்கிய ரெட் ஜெயன்ட் மூவிஸ்
சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது.
எழுத்தாளர் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் காலங்கடந்து கொண்டாடப்பட்டுவருகிறது. உண்மை சம்பவங்களையும், கற்பனையையும் கலந்து 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை இன்றைய தலைமுறையினரும் அதனை விரும்பி படித்துவருகின்றனர்.

மணிரத்னம் உருவாக்கிய பொன்னியின் செல்வன் 1
வருடா வருடம் நடைபெறும் புத்தக கண்காட்சியில் பொன்னியின் செல்வன் புத்தகத்தை தவறாமல் வாங்குபவர்கள் உண்டு. இருப்பினும் ஒருதரப்பினர் அதை வாசிக்காமல் இருந்தனர். அவர்களையும் வாசிக்கத்தூண்டியது பொன்னியின் செல்வன் திரைப்படம். மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியிருக்கிறது பொன்னியின் செல்வன்.

500 கோடி ரூபாயை வசூலித்த பொன்னியின் செல்வன் 1
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்வரை வசூலித்தது. படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயராம், பிரபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

எதிர்பார்ப்பை எகிற வைத்த பொன்னியின் செல்வன் 2
முதல் பாகம் பெற்ற வெற்றியை அடுத்து படத்தின் இரண்டாம் பாகமும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே நாவல் வாசித்தவர்களுக்கு முதல் பாகத்தின் மீது இருந்த சிறு சிறு குறைகளையும் இரண்டாம் பாகம் நிவர்த்தி செய்யும் என நம்பப்படுகிறது. படமானது ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதன் ட்ரெய்லரும் மார்ச் 29ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

பொன்னியின் செல்வன் 2வை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயன்ட்
இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் வெளியிடுகிறது. இதற்கான அறிவிப்பை படத்தை தயாரிக்கும் நிறுவனமான லைகா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் விக்ரம், பீஸ்ட் உள்ளிட்ட பெரிய ஹீரோக்களின் படங்களை வெளியிட்டு கெத்து காண்பித்தது ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம். இந்த வருடத்திற்கான ரெட் ஜெயன்ட் ரிலீஸ் செய்யும் பெரிய படமாக பொன்னியின் செல்வன் 2 இருக்கும் என கருதப்படுகிறது.

தொடர் வீடியோக்களை வெளியிடும் படக்குழு
முன்னதாக, பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா எப்படி அந்தக் கதாபாத்திரமாக மாறினார் என்பது குறித்த வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது., அதேபோல் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விக்ரம் எப்படி அந்தக் கதாபாத்திரமாக மாறினார் என்பது தொடர்பான வீடியோ கடந்த 23ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடயே வரவேற்பைப் பெற்றது. மேலும் இன்று இரவு வந்தியத்தேவன் தொடர்பாக வீடியோ ஒன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











