படமாகும் சோனாகன்ஞ்… பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள் இயக்குகிறார்கள்!
கொல்கத்தா: கொல்கத்தாவின் சோனா கன்ஞ்ச் பகுதியில் பாலியல் தொழிலாளிகளாய் உருக்குலையும் பெண்களின் வாழ்க்கையைப் பற்றிய குறும்படத்தை அவர்களது குழந்தைகளே உருவாக்கி வருகின்றனர்.
இந்தியாவின் பாலியல் தலைநகராய் விளங்கும் கொல்கத்தாவில் பாலியல் தொழில் கொடிகட்டிப் பறக்கும் இடங்கள் சோனாகன்ஞ் மற்றும் முன்ஷிகன்ஞ்.
அப்பகுதிகளில் பாலியல் தொழில் செய்து வரும் பெண்களின் 50 பெண் குழந்தைகள் இணைந்து இக்குறும்படத்தை இயக்கி வருகின்றனர்.

படம் எடுக்கும் குழந்தைகள்:
தற்போது அக்குழந்தைகள் பாலியல் தொழிலுக்கு மாற்றாக கதை எழுதுதல், கேமராவைக் கையாளுதல், படம் எடுத்தல் என்று மிகவும் பிசியாக உள்ளனர்.

பயிற்சிப் பட்டறை:
இக்குழந்தைகளுக்கு 4 நாட்கள் படம் எடுப்பது தொடர்பான பயிற்சிப் பட்டறையை கடந்த வாரம் புகழ்பெற்ற இயக்குனரான அசீம் ஆஷா வழங்கினார். மேலும், ஒரு கதையை படமாக்குவதற்கு முன் அதனை எவ்வாறு சுவாரசியமாக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு விளக்கப்பட்டது.

என் தாயின் வாழ்க்கை:
" நான் படிப்பின் மூலம் என்னுடைய தாயாருக்கு உதவ விரும்புகின்றேன். என் தாயின் வாழ்க்கை எவ்வளவு கடினம் என்பதை என்னுடைய குறும்படத்தின் மூலம் நான் உலகிற்கு காட்ட விரும்புகின்றேன்" என்று கூறியுள்ளார் ஒரு 14 வயது பங்கேற்பாளரான சிறுமி.

வருங்கால இயக்குனர் ஆசை:
அவர்களின் படபிடிப்பெல்லாம் முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரடெக்ஷன் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இக்குழுவில் உள்ள மற்றொரு 8 வயது சிறுமி, "என் வாழ்க்கையிலேயே முதல் முறையாக ஒரு கதையை நான் எழுதி உள்ளேன். கேமராவை நான் இப்போதுதான் பார்க்கின்றேன். அதனைப் பயன்படுத்தும் முறையையும் கற்றுக் கொண்டுள்ளேன். வருங்காலத்தில் மும்பையில் ஒரு சிறந்த மூவி மேக்கர் ஆவேன்" என்று கூறியுள்ளார்.

சிறைகை விரித்துப் பறக்கும் குழந்தைகள்:
குழந்தைகள் கடத்தலை தடுக்கும் தொண்டு நிறுவனம் ஒன்று இம்முயற்சியில் முழு மூச்சாய் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகள் தங்களது கூண்டை உடைத்து வெளியே வந்து சிறகை விரித்துப் பறக்க முடியும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











