புயல் நிவாரணம்: கண்ணீரைத் துடைத்த ஜெயலலிதாவுக்கு பாராட்டு-தங்கர்பச்சான்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள சிறப்பு தொகுப்பு திட்டங்கள் எங்களுக்கு புத்துணர்ச்சியை அளித்து நம்பிக்கையூட்டி இருக்கிறது. ரூ.1 லட்சத்து 18,000 கோடி நிதி நெருக்கடியில் தமிழக அரசு தள்ளாடிக் கொண்டிருக்கும் நிலையிலும் எங்களின் கண்ணீரைத் துடைக்க முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ள முடிவு எங்களை நெகிழ வைத்திருக்கிறது.
முதல்கட்ட உதவி ரூ.500 கோடியை மட்டும் அறிவித்துவிட்டு, பேரிடர் மாவட்டமாக அறிவிக்காமல் இன்னமும்கூட மீதி நிவாரணத் தொகையை அறிவிக்காமலிருக்கிற மத்திய அரசை எதிர்பார்க்காமல், திட்டங்களை அறிவித்திருக்கும் ஜெயலலிதாவுக்கு எங்களது பாராட்டுக்கள்.
மனநலம் குன்றி எந்த திசையில் பயணிப்பது எனப் புரியாமல் குழம்பியிருந்த கடலூர், விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்படுத்தியிருக்கிற இந்த திட்டங்கள் முழுமையாக நிறைவேறி எங்களின் துயர் தீர உடனடியாக கிராமங்கள்தோறும் உழவர்கள் பங்கேற்புக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். அனைத்து பராமரிப்புச் செலவுடன்கூடிய 5 ஆண்டு மரம் வளர்ப்புத் திட்டம், 25 ஏக்கருக்கு ஒரு பம்புசெட்டு அமைத்து பாசன வசதி ஏற்படுத்தித் தரும் திட்டமும் மிக, மிக சிறப்பான திட்டங்கள் ஆகும்.
குழந்தைகளின் கல்வியையும், பிள்ளைகளின் திருமணத்தையும் நிறுத்தி வைக்க முடியாமல் தவித்து வரும் உழவர்களின் கடன்களை தள்ளுபடி செய்தால் பெரிதும் உதவியாக இருக்கும். நாங்கள் முன்னேற காரணமாக நினைத்த எங்கள் குழந்தைகளின் கல்விச் செலவை நாங்கள் மீண்டும் எழுந்து நிற்கும் வரை அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும், இப்போது பள்ளிகளில் வழங்கப்படுகின்ற பிற்பகல் உணவுடன், காலை உணவையும் இந்த மாவட்டங்களில் உள்ள பாதிக்கப்பட்ட பகுதி மாணவர்களுக்கு வழங்க வேண்டுகிறோம்.
உழவன் நிலை உயர்ந்தால்தான் அனைத்தும் உயரும் என்பதை உணர்ந்த முதல்வர் ஜெயலலிதாவின் மேலான எண்ணத்தை நாங்கள் உணர்ந்துள்ளோம். அனைத்தையும் இழந்துள்ள நாங்கள் இப்போது உங்களுக்கு தருவதற்கு வெறும் நன்றி' எனும் சொல் மட்டுமே இருக்கிறது. முதல்வரின் உதவியை நாங்கள் மறக்கமாட்டோம். எங்களின் தலைமுறைகளும் இந்த பேருதவியை மறக்காது என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











