பிரபல இயக்குனருக்கு திடீர் மாரடைப்பு.. மருத்துவமனையில் அனுமதி.. தீவிர சிகிச்சை!
மும்பை: பிரபல நடன இயக்குனருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிரபுதேவா, கணேஷ் ஆச்சாரியா, கே.கே.மேனன் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம், ஏபிசிடி. எனிபடி கேன் டான்ஸ் என்பதன் சுருக்கம்.
நடனத்தை மையப்படுத்தி உருவான இந்தப் படத்தை இயக்கியவர், பாலிவுட் நடன இயக்குனர் ரெமோ டிசோசா.

ஃபிளையிங் ஜாட்
இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்தியில் இந்தப் படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, இதன் அடுத்தப் பாகத்தை இயக்கினார். அதிலும் பிரபுதேவா முக்கிய வேடத்தில் நடித்தார். வருண் தாவன், ஷ்ரத்தா கபூர் உட்பட பலர் நடித்தனர். இந்தப் படமும் வரவேற்பை பெற்றது. அடுத்து ஃபிளையிங் ஜாட், ரேஸ் 3, ஸ்ட்ரீட் டான்சர் உட்பட சில படங்களை இயக்கியுள்ளார்.

டைம் டு டான்ஸ்
சில படங்களை தயாரித்துள்ள அவர், இப்போது டைம் டு டான்ஸ் என்ற படத்தை தயாரித்து வருகிறார். ஏராளமான பாலிவுட் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ள ரெமோ, சில படங்களில் நடித்தும் உள்ளார். முன்னணி இந்தி ஹீரோ படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி இருக்கிறார்.

ஆஞ்சியோ சிகிச்சை
மும்பை அந்தேரி பகுதியில் வசித்து வரும் ரெமோ டிசாசோவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து கோகிலா பென் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக ஆஞ்சியோ சிகிச்சை செய்தனர்.

ரெமோ மனைவி
இப்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதை உறுதி செய்துள்ள இயக்குனர் ரெமோவின் மனைவி லிசெல் டிசோசா, அடுத்த 24 மணிநேரம் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளதாக டாக்டர்கள் கூறி உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தீவிர சிகிச்சை
அவர் இப்போது தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். அவர் நலம்பெற தயவுசெய்து பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து அவர் விரைவில் குணமடைய ரசிகர்களும் திரையுலகினரும் பிரார்த்தித்து வருவதாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











