விஜய்யின் தவெக கூட்டம்.. சேலத்தில் ஒருவர் மட்டுமில்லை இன்னொருவரும் பலி?.. உச்சக்கட்ட அதிர்ச்சி
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் மக்களை சந்திக்க கிளம்பியிருக்கிறார். ஏற்கனவே கரூருக்கு அவர் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதனையடுத்து சேலத்தில் நடந்த கூட்டத்தில் இன்று ஒருவர் உயிரிழந்தார். அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் அதே கூட்டத்தில் இன்னொருவரும் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன.
அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் விஜய், 'உங்கள் விஜய் நா வரேன்' என்கிற பெயரில் அரசியல் சுற்றுப்பயணத்தை ஆரம்பித்தார். அந்தப் பயணத்தின்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். அந்த சம்பவத்துக்கு விஜய்யின் அலட்சியம், தாமதமான வருகை, தவெகவினர் செய்த ஏனோதானோவென்ற ஏற்பாடுதான் காரணம் என பலரும் குற்றஞ்சாட்டிவருகிறார்கள்.
வரவழைத்த விஜய்: அதுமட்டுமின்றி சம்பவம் நடந்த இடத்துக்கு விஜய் நேரில் செல்லாததும் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்தது. அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களை மாமல்லபுரத்துக்கு நேரில் வரவழைத்து ஆறுதல் சொன்னதும் பெரிய கண்டனத்தை பெற்றுக்கொடுத்தது. துக்கம் நடந்த வீட்டுக்கு நேரில் சென்றுதான் ஆறுதல் சொல்ல வேண்டுமே தவிர; நிதியுதவி, பொருள் உதவி அளிப்பது போல் நேரில் வரவழைத்து சொல்வது மனித மாண்பே இல்லை; இப்படிப்பட்ட ஐடியாவை எல்லாம் விஜய்க்கு யார்தான் கொடுக்கிறார்கள்; இப்போதே இப்படி என்றால் ஆட்சிக்கு வந்தால் இன்னும் என்னென்ன செய்வாரோ என்று ஏகப்பட்ட அம்புகள் அவர் மீது பாய்ந்தன.

சேலத்தில் கூட்டம்: கரூர் பிரச்னை பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின. அந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணையையும் தொடங்கியது. இனிமேல் விஜய்யின் கூட்டங்களில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காது என்றுதான் அனைவருமே எதிர்பார்த்தார்கள். அந்த நம்பிக்கையோடு இன்று சேலத்தில் விஜய் நடத்திய கூட்டத்தில் பலரும் பங்கேற்றார்கள். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் விஜய்யின் 20 நிமிட பேச்சை கேட்டார்கள்.
சூரஜ் மரணம்: ஆனால் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு முறையான அடிப்படை வசதியை இந்த முறையும் தவெகவினர் செய்யவில்லை. கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கும் மேலாக வெயிலில் நின்றதன் காரணமாக மயங்கி விழுந்து சுராஜ் என்ற இளைஞர் உயிரழந்தார். இது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியது. இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் இன்னொரு தகவலும் வெளியாக ஆரம்பித்திருக்கிறது.
இன்னொருவர் பலி: அதாவது சுராஜ் மட்டுமின்றி சேலம் கூட்டத்தில் இன்னொருவரும் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வர தொடங்கியிருக்கின்றன. இது மேற்கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தவெகவினர் கூட்டத்துக்கான அடிப்படை வசதிகளை துளிக்கூட செய்யாததுதான் இந்த உயிரிழப்புகளுக்கு காரணம் என பலரும் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் விஜய்யின் கூட்டங்கள் வர வர பிண கிடங்குகளாக மாற தொடங்கிவிட்டதாகவும் விமர்சன அம்புகள் பாய தொடங்கியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications











