கங்குவா ஃபீவர்.. உஷாரான அஜித்?.. அந்தக் கூட்டணிக்கு இப்போது வாய்ப்பில்லையோ?
சென்னை: சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி படுமோசமான விமர்சனத்தை பெற்றிருக்கிறது. 100 கோடி ரூபாயை வசூலித்துவிட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும் படத்துக்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்கள் புயல் போல் சுழன்று அடித்துவிட்டது. இந்தச் சூழலில் அஜித்துடன் சிவா மீண்டும் இணைய வேண்டுமா என்ற கேள்வியை ஏகே ரசிகர்கள் எழுப்பிவரும் சூழலில்; அந்தக் கூட்டணி பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சிறுத்தை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சிவா அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களை இயக்கினார். ஏகேவை வைத்து அவர் இயக்கிய படங்களில் விவேகம் படத்தை தவிர்த்து மற்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. சிறுத்தை படமும் மெகா ஹிட்டானது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக சிவா மீது டாப் ஹீரோக்களின் கண்கள் பட்டன. அந்தவகையில் ரஜினிகாந்த்தை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கினார் சிவா.

அண்ணாத்த ரோஸ்ட்: அஜித்துக்கு எப்படி சூப்பர் ஹிட்டுகளை கொடுத்தாரோ அதேபோல் தனக்கும் செம ஹிட்டை சிவா பரிசளிப்பார் என்ற நம்பிக்கையில்தான் சூப்பர் ஸ்டார் அண்ணாத்த படத்தில் நடித்தார். ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக சிறுத்தை சிவாவை ரசிகர்கள் வைத்து செய்துவிட்டார்கள். படம் தோல்வி என்பதை தாண்டி கடுமையான ட்ரோலுக்கும் உள்ளானது. இருந்தாலும் சிவாவுக்கு தங்க சங்கிலி பரிசளித்து சந்தோஷப்பட்டார் ரஜினிகாந்த்.
கங்குவா: அதேசமயம் தனக்கு அண்ணாத்த படத்தில் ஏற்பட்ட அவப்பெயரை சூர்யாவை வைத்து இயக்கிய கங்குவா படத்தில் துடைத்துக்கொள்ள எண்ணினார் சிவா. பீரியட் ஜானர், தற்கால ஜானர் என இரண்டு காலங்களை இணைத்து கதையையும் செய்திருந்தார். இது ஒருபக்கம் இருக்க படத்தை தயாரித்த ஞானவேல் ராஜாவும், ஹீரோவாக நடித்த சூர்யாவும் படத்துக்கு ஏகப்பட்ட ஹைப்பை ஏற்றிவிட்டனர். 2,000 கோடி ரூபாய் படம் வசூலிக்கும் என்று ஞானவேல் கூற; அனைவரும் வாயை பிளந்து பார்ப்பார்கள் என்று சூர்யாவும் பற்ற வைத்தார்.
படுதோல்வி: ஆனால் படம் ரிலீஸான நவம்பர் 14ஆம் தேதி நிலைமையே தலைகீழாக மாறியது. முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தன. மற்ற நடிகர்களின் ரசிகர்களும், சூர்யாவின் ரசிகர்களும் சேர்ந்து படத்தை வைத்து செய்துவிட்டனர். அதுமட்டுமின்றி படத்தை கடுமையாக ட்ரோலும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். இதன் காரணமாக படக்குழு கொஞ்சம் அப்செட்டில்தான் இருக்கிறது. அதேபோல் இதுவரை 200 கோடி ரூபாய்கூட வசூலிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அஜித்துடன் கூட்டணி: சூழல் இப்படி இருக்க அஜித்தை வைத்து சிவா மீண்டும் படம் இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அந்தப் படம் பற்றிய புதிய பேச்சு எழுந்திருக்கிறது. அதாவது அஜித் இப்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் ஒரேநேரத்தில் நடித்துவருகிறார். அடுத்ததாக சிவா இயக்கத்தில் நடிக்கலாம் என்ற எண்ணத்தில் இருந்தவர்; கங்குவா படத்துக்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களை பார்த்து கொஞ்சம் காலம் கழித்து சிறுத்தை சிவாவுடன் இணையலாம் என்ற முடிவில் இருப்பதாகவும்; அநேகமாக விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களை முடித்த பிறகு சிவாவிடம் கதை கேட்டு பிடித்திருந்தால் ஓகே சொல்ல முடிவெடுத்திருப்பதாகவும் ஒரு தகவல் உலாவிக்கொண்டிருக்கிறது. ஆனால் சிவாவை அஜித்துக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் அவருடன் ஏகே இணைவது உறுதிதான் என்ற இன்னொரு பேச்சும் திரைத்துறையில் ஓடிக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











