தீபாவளி ஸ்பெஷல்: கத்தி, பூஜை படங்களுக்கு நாளை முதல் ரிசர்வேஷன்!
தீபாவளி வெளியீடுகளான கத்தி, பூஜை படங்களுக்கு நாளை முதல் டிக்கெட்டுகள் முன்பதிவு ஆரம்பம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீபாவளிக்கு கத்தி, பூஜை, புலிப்பார்வை ஆகிய படங்கள் ரிலீசாகவிருக்கின்றன. வாய்ப்பிருந்தால் தங்களின் ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தையும் வெளியிட அதன் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் காத்திருக்கிறார்.

இவற்றில் கத்தி படத்துக்கு 400 அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனாலும், தமிழ் அமைப்புகள் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் லைகா நிறுவனத்தை கடுமையாக எதிர்ப்பதால், இறுதி முடிவு எடுக்க முடியாமல் காத்திருக்கின்றனர்.
நேற்று முன்தினம் தியேட்டர் உரிமையாளர்களை சந்தித்துப் பேசிய தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு, இன்று மீண்டும் பேசவிருக்கின்றனர். இந்த சந்திப்பில் கத்தி படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான அய்ங்கரன் கருணாவும் பங்கேற்கிறார்.
சந்திப்பில் இணக்கமான முடிவு ஏற்பட்டால் கத்தி வெளியாவதில் எந்தப் பிரச்சினையும் இருக்காது. அப்படியே பிரச்சினை வந்தாலும் தமிழகம் தவிர்த்து, பிற பகுதிகளில் இதே அளவு அரங்குகளில் வெளியிட மாற்றுத் திட்டம் வைத்துள்ளது லைகா என்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று தியேட்டர்கள் லிஸ்ட் மற்றும் ரிசர்வேஷன் குறித்து கத்தி தயாரிப்பாளர்கள் விளம்பரம் வெளியிட்டுள்ளனர். நாளை முதல் டிக்கெட்டுகள் ரிசர்வ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பூஜை படத்துக்கான டிக்கெட் முன்பதிவும் நாளை முதல் தொடங்குவதாக இன்று விளம்பரங்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











