Retro Blue Sattai Maran Review: ரெட்ரோவில் சும்மா சொருகி விட்டிருக்காங்க.. வறுத்தெடுத்த ப்ளூ சட்டை மாறன்!
சென்னை: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெட்ரோ. இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்த படம் எப்படி உள்ளது என்பது குறித்து ப்ளூ சட்டை மாறன் வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள வீடியோவில், " படத்தின் கதையை பொறுத்தவரையில் ஜோஜு ஜார்ஜ் தூத்துக்குடியில் பெரிய ரவுடியாக உள்ளார். இவருக்கு வாரிசு இல்லை. அவரிடம் வேலை பார்ப்பவரை அவரது எதிரி கொலை செய்து விடுகிறார். இதனால் அவரது குழந்தை அனாதை ஆகிவிடுகிறது. அந்த குழந்தையை நாம் எடுத்து வளர்க்கலாம் என ஜோஜு ஜார்ஜின் மனைவி கூறுகிறார். இதில் ஜோஜு ஜார்ஜ்க்கு இஷ்டம் இல்லை என்றாலும், குழந்தையை ( சூர்யா) எடுத்து வளர்க்கிறார்கள்.
அந்த குழந்தை ஜோஜுவை அப்பா என்று கூப்பிடும் போது எல்லாம், யாருடா உன்னோட அப்பா என வேண்டா வெறுப்பாக இருக்கிறார். ஆனாலும் அந்த பையன் ஜோஜு மீது பிரியமாக உள்ளார். ஜோஜுவின் மனைவி ஒரு கட்டத்தில் இறந்துவிடுகிறார். இறக்கும் போது அந்த பையனிடம், நீ எப்போதும் அப்பாவோடு தான் இருக்க வேண்டும் எனக் கூறுகிறார். இதனால் அந்த பையன் ரவுடியாகவே வளர்கிறான். ஒரு கட்டத்தில் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். நீ ரவுடித்தனத்தை விட்டுவிட்டு வா என அந்த பெண் சொல்ல, இதனால் ரவுடித்தனத்தை விட்டுவிட்டு அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம் என போகிறார். அப்போது ஒரு சம்பவத்தை செய்து விடுகிறார்.

இது தான் கதை: அது என்னவென்றால், ஜோஜு ஜார்ஜ்க்கு வரவேண்டிய ஒரு கன்சைன்மெண்ட்டை கதாநாயகன் தடுத்து வைத்துள்ளார். இதனால் கதாநாயகனின் திருமணத்திற்குச் சென்று ஜோஜு ஜார்ஜ் இது தொடர்பாக கேட்கிறார். அந்த கன்சைன்மெண்ட் உங்களுக்கு வந்தால் அதனால் உங்களுக்கு தான் பிரச்னை எனக் கூறுகிறார், கதாநாயகன். இதனால் கோபப்பட்ட ஜோஜு ஜார்ஜ் நீ கொடுக்கவில்லை என்றால் உன் காதலியை என்ன செய்கிறேன் எனப் பார் என்று கூறுகிறார். அந்த இடத்தில் கதாநாயகன் திருப்பி அடிக்க ஆரம்பிக்கிறார். இப்படி ஆரம்பிக்கும் இந்த கதை ராமாயணம், மகாபாரதம், இதிகாசம், புராணம் இதற்குள் எல்லாம் போகிறது. அதன் பின்னர் 1960, 1970 மற்றும் கி.மு வரை போகிறது, அதன் பின்னர் ஒரு பெரிய பேய் கதை சொல்லுகிறார்கள், அது என்ன என்பதுதான் இந்த படத்தின் கதை.
மொக்கை கதை: சினிமாவில் நன்கு அனுபவம் வாய்ந்த எழுத்தாளர்களும் கதாசிரியர்களும் அடிக்கடி சொல்லும் விஷயம் என்னவென்றால் ஒரு நல்ல கதை தனக்குத் தேவையான காட்சிகளை அதுவே வாங்கி உள்ளே வைத்துக் கொள்ளும். அப்படித்தான் ஒரு நல்ல கதை அமையும் என்று சொல்லுவார்கள். அவர்கள் சொல்லாத ஒரு விஷயம் உள்ளது. அதாவது ஒரு மொக்கை கதை, அதற்கு தேவையான மொக்கை மொக்கையான சீன்களை எல்லாம் வாங்கி சொருகிக் கொள்ளும். அதுபோல வாங்கி சொருகி, நம்மை மொத்தமாக சொருகி விட்ட படம் தான் இந்த ரெட்ரோ.
யார் வில்லன்: இது போன்ற படத்தில் எல்லாம் வில்லன் கதாபாத்திரங்கள் மிகவும் ஸ்ட்ராங்காக இருக்க வேண்டும். இந்த படத்தில் வில்லன் ஜோஜு ஜார்ஜா? பிரகாஷ் ராஜா? நாசரா? நாசரின் மகனா எனத் தெரிந்து கொள்வதற்குள் படமா முடிந்து போகிறது. தூத்துக்குடியில் ஆரம்பிக்கும் கதை எங்கெங்கோ போகிறது. தூத்துக்குடியில் ஒரு அம்மா இறந்து போகிறது, அவர்களை எதற்காக காசியில் அடக்கம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அதன் பின்னர் கதை ஆப்பிரிக்காவுக்கு போகிறது. அங்கிருந்து எதற்காக அந்தமானுக்கு போனார்கள் என்று தெரியவில்லை.

கிளாடியேட்டர்: அந்தமானுக்கு போனால், அங்கு இருக்கும் வில்லன், அடிமைகளை வைத்துக் கொண்டு, கிளாடியேட்டர் படம் போல சண்டை விட்டுக் கொண்டு இருக்கிறான். ஒரு கிணறு இருக்கிறது. அதில் முதலைகள் இருக்கின்றன. அதற்குள் மனிதர்களைத் தள்ளுகிறார்கள், குழந்தைகளைப் போடுகிறார்கள். திடீரென லாஃப்டர் தெரபி என ஜெயராமைக் காட்டுகிறார்கள். அவர் வந்து காமெடி செய்து கொண்டு உள்ளார். அது கொஞ்சமும் ஒர்க்-அவுட் ஆகவில்லை. படத்தில் சிரிப்பு வரும் படியான ஒரு காட்சி இருந்தது. அதாவது கதாநாயகன் சூர்யாவுக்கு கெட்டப் போடுகிறோம் என ரெடின் கிங்ஸ்லி கெட்டப்பை போட்டு விட்டுள்ளார்கள். அது நல்லா காமெடியாக இருந்தது. ஆனால் படத்தில் அது சீரியஸான காட்சி.
ஏன்: படத்திற்காக பல காட்சிகளை படமாக்கி விட்டு, அதன் பின்னர் தேவையில்லை என வெட்டி எரிந்துள்ளார்கள். பிரகாஷ் ராஜ் இரண்டு மூன்று காட்சிகளுக்கு வந்து பேசிவிட்டுச் செல்கிறார். கருணாகரன் எதற்காக வருகிறார் என்றே தெரியவில்லை. சிங்கம் புலி எதற்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. பாபி சிம்ஹாவை காணவில்லை. எடுத்துவிட்டு வெட்டி போட்டு விட்டார்களா என்று தெரியவில்லை. வெட்டி போட்டத்தில் மிச்சமே ஏறக்குறைய 3 மணி நேரத்திற்கு ஓடிக் கொண்டு உள்ளது.

படம் எப்படி இருக்கு?: அதன் பின்னர் குட் பேட் அக்லி வந்த பிறகு, விடாமுயற்சியே நல்ல படம் என்று சொல்லிக் கொண்டு இருந்தார்கள். இப்போது ரெட்ரோ படத்தை பார்த்துவிட்டு கங்குவா எவ்வளவோ நல்ல படம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த படம் நல்ல படம் ஆகவேண்டும் என்றால், அடுத்து வரும் படத்தை பார்த்தால் போதும். ஒயின் எல்லாம் பழசாக பழசாகத்தான் மதிப்பு அதிகம். 200 ஆண்டுகள் பழமையான ஒயினுக்கு சந்தையில் பல கோடிகள் ரூபாய் மதிப்பு. அதேபோல், 200 ஆண்டுகளுக்கு பின்னர் நமது சந்ததிகள் பேசும்போது, அந்தக் காலத்தில் ரெட்ரோனு ஒரு படம் வந்துச்சு. அது எப்பேர்ப்பட்ட படம் தெரியுமா? என்று பேசுவார்கள். அதனால் வருங்காலத்தில் நமது சந்ததியினர் வேண்டுமானால் இந்த படத்தை பற்றி பேசட்டும், இப்போது உங்களுக்கு வேறு ஏதாவது வேலை வெட்டி இருக்கிறது என்றால் முதலில் அதைப் போய் பாருங்கள்" எனத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் பெற்ற ரெட்ரோ படத்திற்கு ப்ளூ சட்டை மாறனின் விமர்சனம் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











