சுஷாந்த் சிங் வழக்கு.. என்னைப் பற்றி பயங்கரமான கதைகள்.. எனக்கு நீதி கிடைக்கும்.. மனம் திறந்த காதலி!
மும்பை: சுஷாந்த் விவகாரத்தில் தனக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவதாக நடிகை ரியா சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14 ஆம் தேதி தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார்.
இளம் நடிகர் ஒருவர் திடீரென தற்கொலை செய்துகொண்டது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மன அழுத்தம்
கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக்கில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர் சுஷாந்த் சிங். இவர் நடித்த கடைசி படமான, தில் பெச்சாரா கடந்த மாதம் 24 ஆம் தேதி ஒடிடி-யில் வெளியானது. நடிகர் சுஷாந்த் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. சுஷாந்த் சிங் பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் மருந்துசீட்டுகளை அவர் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றினர்.

ரியா சக்கரவர்த்தி
சுஷாந்தின் நண்பர்கள், தோழிகள், அவருடன் தொடர்பில் இருந்தவர்கள், இயக்குனர்கள் என சுமார் 38 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து நடத்தி வருகின்றனர். நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்கரவர்த்தியிடமும் விசாரித்தனர். அவரிடம் பல மணி நேரம் நடந்த விசாரணையில், அவர் பல்வேறு தகவல்களைத் தெரிவித்தார்.

சுஷாந்த் சிங் தந்தை
இந்நிலையில் மறைந்த சுஷாந்த் சிங்கின் தந்தை கே.கே.சிங், பாட்னா ராஜீவ் நகர் போலீஸ் ஸ்டேஷனில் ரியா சக்கரவர்த்தி மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பரபரப்பு புகார் கொடுத்தார். அதில் அவர், சுஷாந்தை நடிகை ரியா மிரட்டி வந்துள்ளார் என்றும் சுஷாந்த் சிங்கின் வங்கி கணக்குகளை, ரியாதான் கையாண்டு வந்ததாகவும் அவர் கணக்கில் இருந்து கடந்த ஒரு வருடமாக, 15 கோடி ரூபாய் வரை, ரியாவுக்கு பண பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அங்கிதா லோகண்டே
இதையடுத்து ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த பாட்னா போலீசார், மும்பை வந்துள்ளனர். இந்நிலையில் மறைந்த சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியான டிவி நடிகை அங்கிதா லோகண்டே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'Truth Wins' என்று குறிப்பிட்டிருந்தார். இது பரபரப்பானது.

பயங்கரமான கதைகள்
இதற்கிடையே நடிகை ரியா சக்கரவர்த்தி நேற்று மாலை வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், தனக்கு கடவுள் மீதும் நீதியின் மீதும் நம்பிக்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். 'என்னைப் பற்றி பல மின்னணு ஊடகங்களில் பயங்கரமான கதைகள் சொல்லப்படுகின்றன. இருந்தாலும் நீதி கிடைக்கும் என்று நம்புகிறேன். என் வழக்கறிஞரின் ஆலோசனைப்படி கருத்து தெரிவிப்பதை தவிர்க்கிறேன்' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











