சுஷாந்த் சிங் வழக்கு.. சிபிஐ அதிகாரிகளிடம் இருந்து ரியாவுக்கு சம்மன் வரலையாமே.. வழக்கறிஞர் தகவல்!
மும்பை: சுஷாந்த் சிங் வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகளிடம் இருந்து நடிகை ரியாவுக்கு சம்மன் வரவில்லை என்று அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல இந்தி நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14 ஆம் தேதி அவரது வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அவரது தற்கொலை இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் சுஷாந்த் சிங்கின் தந்தை பாட்னா போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தார்.

சி.பி.ஐ. அதிகாரிகள்
அதில், சுஷாந்த் சிங்கை அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்கரவர்த்தி தற்கொலைக்குத் தூண்டியதாகவும் பணமோசடியில் ஈடுபட்டார் என்றும் கூறியிருந்தார். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. இதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 20 ஆம் தேதி மும்பை வந்தனர்.

விருந்தினர் மாளிகை
இந்நிலையில் நேற்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்கி இருக்கும் விருந்தினர் மாளிகைக்கு, சுஷாந்த் சிங்குடன் வீட்டில் தங்கியிருந்த அவரது நண்பர் சித்தார்த் பிதானி, சமையல்காரர் நீரஜ் சிங், வேலைக்காரர் தீபேஷ் சாவந்த் ஆகியோர் தனித்தனியாக வந்தனர். அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அந்த விசாரணை பதிவு செய்யப்பட்டது.

அடுக்குமாடி குடியிருப்பு
பின்னர் அதிகாரிகள் அவர்களை, பாந்திராவில் சுஷாந்த் சிங் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். சுஷாந்த் சிங் தூக்கில் பிணமாக மீட்கப்பட்ட போது நடந்த காட்சிகளை 3 பேரையும் நடிக்க சொல்லி விசாரணை நடத்தினர்.
சுஷாந்த் சிங்கின் வீட்டை புகைப்படம், வீடியோ எடுத்தனர்.

ரியா சக்கரவர்த்தி
பின்னர் சி.பி.ஐ. அதிகாரிகள் சுஷாந்த் சிங் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மருத்துவமனையிலும் பாந்த்ரா போலீசாரிடமும் விசாரணை நடத்தினர். கூடவே தடயவியல் நிபுணரும் அவர்களுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகை ரியா சக்கரவர்த்தியிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த உள்ளதாகச் செய்தி பரவியது.

வழக்கறிஞர் மறுப்பு
ஆனால், இதை ரியாவின் வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே மறுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், சிபிஐ அதிகாரிகளிடம் இருந்து நடிகை ரியா சக்கரவர்த்திக்கோ அல்லது அவர் குடும்பத்தினருக்கோ இதுவரை எந்த சம்மனும் வரவில்லை. அப்படி சம்மன் அனுப்பப்பட்டால் அவர்கள் விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராவார்கள் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











