கொலையா? தற்கொலையா? சுஷாந்த் வழக்கில் சிபிஐ அறிக்கையை விரைவில் வெளியிட ரியா வக்கீல் கோரிக்கை
மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் மரணம் பற்றிய விசாரணை அறிக்கையை உடனே பகிரங்கப்படுத்த வேண்டும் என்று நடிகை ரியா சக்கரவர்த்தியின் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
இது இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது.

மன அழுத்தம்
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மும்பை போலீசார் விசாரித்து வந்தனர். இது தொடர்பாக அவருடன் பழகிய நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், நண்பர்கள் உட்பட பலரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

ரியா சக்கரவர்த்தி
இந்நிலையில், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி மத்திய அரசு உத்தரவிட்டது. தற்கொலைக்கு தூண்டியதாக நடிகர் சுஷாந்த் சிங்கின் காதலியான நடிகை ரியா சக்கர வர்த்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களுக்கு போதைப் பொருள் பழக்கம் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார்.

மருத்துவ குழு
இதற்கிடையே சுஷாந்த் சிங். கொலை செய்யப்பட்டதாக ஒரு தரப்பினர் கூறி வந்த நிலையில், இது தற்கொலை தான் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழு தெரிவித்தது. ஆனால் இந்த வழக்கை விசாரித்து வந்த சி.பி.ஐ. தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

அனில் தேஷ்முக்
இதுகுறித்து மகாராஷ்ட்ர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறும்போது, சுஷாந்த் சிங் மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க தொடங்கி 5 முதல் 6 மாதங்களாகி விட்டது. அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா என்று மக்கள் கேட்க தொடங்கி உள்ளனர். விரைவில் விசாரணை அறிக்கையை சிபிஐ பகிரங்கப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.

பல அமைப்புகள்
இந்நிலையில் நடிகை ரியா சக்கரவர்த்தியின் வழக்கறிஞர் மனிஷிண்டேவும் இதையே கோரியுள்ளார். அவர் கூறும்போது, மும்பை போலீஸ் இந்த வழக்கை 2 மாதம் விசாரித்தது. பின்னர் ரியா மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் பீகாரில் பொய் புகார் கொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் பல அமைப்புகள் விசாரணை நடத்தியுள்ளன.

விசாரணை அறிக்கை
மும்பை போலீஸ், அமலாக்கத்துறை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, பாட்னா போலீஸ், சிபிஐ போன்றவை விசாரணை நடத்தியுள்ளன. எதுவாக இருந்தாலும் கடந்த 4 மாதமாக விசாரணை நடத்திய சிபிஐ தங்கள் விசாரணை அறிக்கையை விரைவாக வெளியிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











