நானும் ரஞ்சித்தும் இந்த சமூகத்துக்குச் செய்ய நிறைய உள்ளன! - இயக்குநர் கோபி நயினார்
Recommended Video

சென்னை: நானும் இயக்குநர் பா ரஞ்சித்தும் இந்த சமூகத்துக்குச் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன. நாங்கள் ஒருமித்துச் செயல்பட வேண்டிய கட்டாயம் உள்ளது என்று அறம் இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளார்.
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் படம்தான் இப்போது சமூகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. அதே நேரம், கோபி நயினாருக்கு ஆதரவாகப் பேசுவதாகக் கூறிக் கொண்டு, இயக்குநர் ரஞ்சித்தை சிலர் விமர்சித்து வருகின்றனர். அவர் இயக்கிய மெட்ராஸ் படத்தின் கதை கோபி நயினார் இயக்கவிருந்த கருப்பர் நகரம் கதைதான் என்று சிலர் கூறி வருகின்றனர்.

ஆனால் கோபி நயினார் எந்த இடத்திலும் அப்படி உரிமை கோரியதில்லை. கத்தி படத்தின் கதைதான் தன்னுடையது என்று கூறி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த நிலையில் தேவையின்றி ரஞ்சித் ஆதரவாளர்கள், கோபி ஆதரவாளர்கள் என பிரிந்து நின்று கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளனர், சமூக வலைத் தளங்களில்.
தேவையற்ற இந்த விவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு கோபி நயினார் தரப்பிலிருந்து இப்படி ஒரு அறிக்கை வந்துள்ளது:
"இயக்குநர் ரஞ்சித் அவர்களும், நானும் சமூக அரசியலிலும், முன்னேற்றத்திலும் ஒரே இலக்கை நோக்கி பயணிப்பவர்கள். ஆனால் சில நலவிரும்பிகள் அன்பின் மிகுதியால் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இது ஆரோக்கியமான சூழலல்ல.
தோழர்களே! படைப்பிற்கான விமர்சனங்களை வரவேற்கிறேன்.
நானும், இயக்குநர் ரஞ்சித்தும் இந்த சமூகத்தில் செய்ய வேண்டிய வேலைகளும், கடமைகளும் ஏராளம் இருக்கின்றன. அதில் குறிப்பாக நாங்கள் இருவரும் ஒருமித்துச் செயல்பட வேண்டிய கட்டாயமும் கூட. அப்போதுதான் இந்த பலம் எல்லோரையும்
ஒருங்கிணைப்பதற்கான காரணமாக அமைய கூடும்.
ஆதலால் உறவுகளை சிக்கல் ஆக்குகின்ற எந்தவொரு பதிவுகளையும் நான்
அனுமதிக்க மாட்டேன்.
நலம் விரும்பிகளின் பதிவுகள் யாருக்கேனும் மனவருத்தததை தந்திருந்தால் அவர்களுக்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.
தோழமையுடன் கோபி நயினார்."
அவ்வளவுதான் விஷயம். போய் அவரவர் வேலைகளைப் பாருங்க நலம் விரும்பிகளே!


Click it and Unblock the Notifications











