தாதா சாகேப் பால்கே விருதுடன் காந்தாரா ஹீரோ.. பிரதமரை புகழ்ந்ததால்தான் விருதா?
பெங்களூரு: தாதா சாகேப் பால்கே விருது வென்ற ரிஷப் ஷெட்டி விருதுடன் தான் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறார்.
ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான கன்னட படம் காந்தாரா. பழங்குடி இன மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து உருவான இந்தப் படமானது விமர்சன ரீதியாக பலரிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் படம் டப் செய்யப்பட்டு வெளியானது. கன்னடத்தில் பெற்ற வரவேற்பைப் போலவே மற்ற மொழிகளிலும் படம் ஹிட்டானது.

வசூலில் மாஸ் காட்டிய காந்தாரா
குறிப்பாக காந்தாரா திரைப்படமானது 16 கோடி ரூபாய்க்கு தயாரிக்கப்பட்டிருந்தது. படம் சிறப்பாக இருந்ததால் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய்வரை வசூல் செய்ததாக அறிவிக்கப்பட்டது. கன்னட திரையுலகில் கேஜிஎஃப் 2 படத்திற்கு பிறகு அதிக வசூல் செய்த படம் காந்தாரா ஆகும்.

காந்தாரா பெற்ற பாராட்டுகள்
காந்தாரா படம் சிறப்பாக இருந்ததால் பிரபலங்களும் அந்தப் படத்தை வெகுவாக பாராட்டினர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் இயக்குநரும், கதாநாயகனுமான ரிஷப் ஷெட்டியை நேரில் அழைத்து பாராட்டினார். அதேபோல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரும் காந்தாரா படத்துக்கு தங்களது பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்தனர்.

தாதா சாகேப் பால்கே விருது
இந்தச் சூழலில் காந்தாரா படம் நிச்சயம் ஏதேனும் ஒரு விருது பெறும் என்று திரையுலகினர் ஆரூடம் கூறிவந்தனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத விதமாக உச்ச விருதுகளில் ஒன்றாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது அந்தப் படத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர் என்ற பிரிவில் ரிஷப் ஷெட்டிக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது.

விருதுடன் கதாநாயகன் ரிஷப் ஷெட்டி
இந்நிலையில் நேற்று மும்பையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அப்போது சிறந்த நம்பிக்கைக்குரிய நடிகர் என்ற பிரிவில் 2023ஆம் ஆண்டுக்கான் தாதா சாகேப் பால்கே விருது ரிஷப் ஷெட்டிக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து தான் பெற்ற விருதுடன் இருக்கும் புகைப்படத்தை ரிஷப் ஷெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

பிரதமர் மோடியை புகழ்ந்ததால் இந்த விருதா?
காந்தாரா படம் வெளியான சமயத்தில் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார் ரிஷப் ஷெட்டி. அப்போது அவரிடம் பிரதமர் மோடி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், 'மோடி ஒரு அற்புத நாயகர்'என குறிப்பிட்டிருந்தார். பிரதமர் மோடியை ரிஷப் ஷெட்டி அவ்வாறு புகழ்நது பேசியதால்தான் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கிறது. பழங்குடி மக்கள் சதா காலமும் போதையில் இருப்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு படத்துக்கு எப்படி உயரிய விருதை வழங்கலாம் என ஒரு தரப்பினர் விமர்சனத்தையும், கேள்வியையும் முன்வைத்து வருகின்றனர்.

காந்தாராவின் இரண்டாம் பாகம்
இதற்கிடையே, காந்தாரா படத்தின் 100 நாள் வெற்றி விழா கொண்டாட்டத்தின்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என கூறியிருந்தார் ரிஷப் ஷெட்டி. அந்தப் படத்தின் பட்ஜெட் 3000 கோடி ரூபாயாக இருக்கலாம் என தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி அந்த விழாவில் பேசிய ரிஷப், நீங்கள் இப்போது பார்த்ததுதான் உண்மையிலேயே காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் என கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











