நான் ஒரு கன்னடர்..பாலிவுட்டில் நடிக்க மாட்டேன்.. காந்தாரா வெற்றியால் வரம்புமீறி பேசும் ரிஷப் ஷெட்டி!
சென்னை : காந்தாரா திரைப்படம் பிளாஸ் பஸ்டர் ஹிட்டடித்து வசூலை வாரிக்குவித்து வரும் நிலையில், பாலிவுட்டிலிருந்து வந்த வாய்ப்பை நிராகரித்து, நான் ஒரு கன்னடர் என்று ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார்.
கேஜிஎப் திரைப்படத்திற்கு பிறகு கன்னட திரைப்படமான காந்தாரா படத்தின் மீது அனைவரின் பார்வையும் விழுந்துள்ளது. அண்மையில் திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் வசூலை வாரிக்குவித்து வருகிறது.
இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கிறார். தமிழகத்தைச் சேர்ந்த கிஷோர், நாயகியாக சப்தமி கவுடா என பலர் நடித்துள்ளனர்.

காந்தாரா
காந்தாரா கன்னட திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு அக்டோபர் 15ந் தேதி திரையரங்கில் வெளியானது. இப்படத்தை பார்த்து வியந்து போன நடிகர் தனுஷ், பிரபாஸ், கார்த்தி, பிருத்விராஜ், ரஜினிகாந்த் என அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என புகழ்ந்து வருகின்றனர்.

ஒரு கிராமத்தின் கதை
காந்தாரா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த ரிஷப் ஷெட்டி, காந்தாரா படத்தின் வெற்றியால், மற்ற மொழிகளிலும் இப்படத்தை தழுவி எடுக்கலாம் என்ற பேச்சுக்கள் எழுந்துள்ளன. அப்படி நடப்பதை தன்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. காந்தாரா ஒரு எளிமையான கதைதான். ஒரு ஹீரோ இருக்கிறார், ஒரு வில்லன் இருக்கிறார், எங்களிடம் காதல் இருக்கிறது, வழக்கமான விஷயங்களின் புதிய பேக்கேஜிங். இது எனது கிராமத்தின் கதை, நான் சிறுவயதில் இருந்து பார்த்த ஒன்று.

மக்களுக்காக
திரைப்படத்தை பார்வையாளர்களுக்காக உருவாக்குகிறோம், நமக்காக அல்ல. அவர்களையும் அவர்களின் உணர்வுகளையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். அவர்களின் வாழ்க்கை முறை என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். நாங்கள் திரைப்படத் தயாரிப்பாளர்களாக இருப்பதற்கு முன்பே சாதாரண மக்களாக இருந்தோம் என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

நான் ஒரு கன்னடர்
எனக்கு பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்களிடமிருந்து வாய்ப்புகள் வந்தன. ஆனால், நான் ஒரு கன்னடர்... கன்னடத்தில் மட்டுமே திரைப்படங்களை இயக்க விரும்புகிறேன். பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர்கள் சில நாட்களில் என்னை மறந்து விடுவார்கள். ஆனால் குடும்பத்தினரும் நண்பர்களும் மாற மாட்டார்கள்.

என் மக்களை விட்டுக்கொடுக்க மாட்டேன்
கன்னட மக்கள் என் படத்தை விரும்பி பார்த்ததால் தான் நான் இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளேன். நான் எனது கன்னட சினிமாவை எப்போதுமே விட்டுக் கொடுக்க மாட்டேன் என்றார். படத்தை பாலிவுட் ரசிகர்கள் பார்க்க விரும்பினால், ஹிந்தியில் டப் செய்து வெளியிடுவேன் என ரிஷப் ஷெட்டி பேசியுள்ளார். பாலிவுட் குறித்து அவர் பேசியது பலரை காயப்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











