கிரெடிட் கார்ட்னால தான் அழிஞ்சேன்.. ரொம்ப உஷாரா இருங்க.. சிங்கப்பூர் சலூன் ஹீரோ ஆர்ஜே பாலாஜி பளிச்!
சென்னை: சிங்கப்பூர் சலூன் படத்தின் வெற்றியால் சந்தோஷத்தில் ஆர்ஜே பாலாஜி மற்றும் அவரது படக்குழுவினர் உள்ளனர். படம் வெளியான பின்னரும் தொடர்ந்து இயக்குநர் கோகுல் மற்றும் ஆர்ஜே பாலாஜி பேட்டி அளித்து இன்னும் ஒரு வாரத்துக்கு மேல் படத்தை ஓட்டி விடலாம் என புரமோஷன் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் மீடியா ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஆர்ஜே பாலாஜி தனது குடும்பம் பற்றியும் அப்பா சிறு வயதிலேயே குடும்பத்தை விட்டு விட்டு ஓடி விட்டார் என்றும் தன்னையும் தன் குடும்பத்தாரையும் தாத்தா தான் பார்த்துக் கொண்டார் என பேசியுள்ளார். மேலும், கிரெடிட் கார்டு மூலமாக தான் அழிந்த கதையையும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

கிரெடிட் கார்டு வாங்கலையோ கிரெடிட் கார்டு: தினமும் உங்கள் போனுக்கு ஒரு 4 முறையாவது கிரெடிட் கார்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்கிற போன் வந்து நச்சரிக்கும். ஏற்கனவே வைத்திருக்கிறேன் என்றாலும், இது வேற பேங் கிரெடிட் கார்டு இதுல அந்த வசதி இருக்கு, ஏர்போர்ட் லாஞ்ச் இத்தனை முறை பயன்படுத்தலாம், மூவி டிக்கெட் மாசத்துக்கு ரெண்டு கிடைக்கும் என ஆசைக்காட்டி பல கிரெடிட் கார்டுகளை விற்பனை செய்ய வலை வீசி வருகின்றனர். இளைஞர்கள் கடன் காரர்களிடமோ, தெரிந்தவர்களிடமோ காசு கேட்டு அசிங்கப்பட்ட நிலையில், கிரெடிட் கார்டுகளை வாங்கி செலவு செய்ய ஆரம்பித்து விடுகின்றனர். ஆனால், அதில் உள்ள பாதிப்புகள் சரியாக பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை என்றால் வரும் வட்டி என பல விஷயங்கள் பலரை பாதிக்கச் செய்து வருகின்றன.
கிரெடிட் கார்டால் அழிஞ்சேன்: இந்நிலையில், ஆர்ஜே பாலாஜியும் கிரெடிட் கார்டு மூலமாக பாதிக்கப்பட்ட சோக கதையை சொல்லியிருக்கிறார். 2007ம் ஆண்டு தன்னிடம் உள்ள கிரெடிட் கார்டு மட்டுமின்றி நண்பர்களிடம் உள்ள கிரெடிட் கார்டுகளையும் வாங்கி, அதை பஜாரில் கொடுத்து பணமாக மாற்றிக் கொண்டு செலவு செய்து விடுவேன் என்றும் அடுத்த மாதம் அனைத்து கடனையும் அடைக்க போராடுவேன். ஒரு கட்டத்தில் அதிக கடன்சுமையால் சிக்கித் தவித்தேன் அதிலிருந்து மீள்வதற்காக தெரப்பி கூட எடுத்துக் கொண்டேன். சுமார் 10 ஆண்டுகள் கிரெடிட் கார்டு பயன்படுத்துவதையே நிறுத்தி கார்டுகளை எல்லாம் உடைத்துப் போட்டேன் என பேசியுள்ளார்.

உஷாரா இருங்க: ஆனால், இப்போ மீண்டும் தன்னிடம் ஒரே ஒரு கிரெடிட் கார்டு உள்ளது என்றும் கிரெடிட் கார்டை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றும் கார்டு இருக்கிறதே என பொருட்களை வாங்கிப் போட்டால், ஒரு நாள் அது பேராபத்தை கொண்டு வரும் என தனக்கு நேர்ந்த அனுபவங்களை ரசிகர்களிடமும் பகிர்ந்துள்ளார்.
அப்பா எங்களை விட்டுட்டு போயிட்டாரு: சின்ன வயசுலயே அப்பா எங்களை விட்டுட்டு போய்விட்டார். அம்மாவும் திறமையானவர் கிடையாது. வீட்டு வேலைகள் கூட செய்ய மாட்டார். எனக்கு விவரம் தெரிந்து கூட தாத்தா தான் பாத்திரம் கழுவுவது முதல் துணி துவைப்பது, சமைப்பது என எல்லாவற்றையும் செய்வார். அவர் இல்லை என்றால், நானும் என் தம்பி, தங்கைகளும் வளர்ந்திருக்கவே மாட்டோம் என சொந்த வாழ்க்கையில் தான் பட்ட பல கஷ்டங்களையும் மனம் திறந்து பேசியுள்ளார்.
சிங்கப்பூர் சலூன் வசூல்: 8 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இதுவரை 6 கோடிக்கும் அதிகமான வசூலை முதல் 5 நாட்களிலேயே எடுத்து விட்டது. இந்த வாரமும் அந்த படம் சிறப்பாக ஓடும் என்பதால் அதிகபட்சமாக 10 கோடிக்கும் அதிக வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











