மிட் நைட்டில் ஃபோன் கால்.. ஹீரோவிடம் செமயாக திட்டு வாங்கிய விக்னேஷ் சிவன்.. ஓஹோ இது வேறயா
சென்னை: போடா போடி படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அந்தப் படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் அவர் அடுத்ததாக இயக்கிய நானும் ரௌடிதான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படத்தின்போதுதான் நடிகை நயன்தாராவை காதலித்தார். பிறகு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு உயிர், உலக் என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார். விக்னேஷ் சிவன் திட்டு வாங்கிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.
போடா போடி படத்தில் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். சிம்பு, வரலட்சுமி, ஷோபனா, விடிவி கணேஷ் என பலர் நடித்திருந்த அந்தப் படம் நல்ல கதையம்சத்துடன் வந்தாலும் போட்டியாக களமிறங்கிய துப்பாக்கி படத்தினால் இருக்கும் இடம் தெரியாமல் போனது போடா போடி திரைப்படம். அந்தப் படத்துக்கு பிறகு விக்னேஷ் சிவனுக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே போஸ்டர் டிசைன், பாடல்கள் எழுதுவது என தன்னை சினிமாவில் வைத்துக்கொண்டார்.

தனுஷுடன் அறிமுகம்: அந்தவகையில் தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய வை ராஜா வை படத்துக்கு விக்னேஷ் சிவன் போஸ்டர் டிசைன் செய்தார். அது ஐஸுக்கு பிடித்துப்போக அவர் மூலம் தனுஷின் அறிமுகம் கிடைத்தது. அந்த அறிமுகத்தால் வேலையில்லா பட்டதாரி படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். தொடர்ந்து விக்னேஷ் சிவன் நானும் ரௌடிதான் படத்தின் கதையை தனுஷிடம் சொல்ல படத்தை தயாரிக்கவும் ஒத்துக்கொண்டு; நயன்தாராவை ஹீரோயினாக நடிக்க வைக்க ஐடியாவும் சொன்னார்.
மலர்ந்த காதல்: அதனையடுத்து நயனுக்கு நானும் ரௌடிதான் படத்தின் கதை பிடித்துப்போனதை தொடர்ந்து படத்தில் நடிக்க கமிட்டானார். அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருவருக்குமான காதல் மலர்ந்தது. படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் முடியும்வரையில் செட்டில் இருந்த யாருக்கும் அவர்கள் காதலிக்கிறார்கள் என்பதே தெரியாது. ஏன் சீனியர் நடிகை ராதிகாவுக்குக்கூட நயன் - விக்கி காதல் விவகாரம் தெரியாது என்பதும்; தனுஷ் மூலம்தான் அவருக்கே தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரச்னை: இப்போது லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தை இயக்கிவருகிறார் விக்னேஷ் சிவன். சூழல் இப்படி இருக்க Nayanthara Beyond The Fairy Tale என்ற ஆவணப்படம் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த ஆவணப் படத்தில் நானும் ரௌடிதான் படத்தின் சில ஃபுட்டேஜுகளை தனுஷ் தருவதற்கு மறுத்துவிட்டார். அதையும் மீறி மூன்று நொடிகள் காட்சிகள் பயன்படுத்தப்பட்டதால் பத்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டார். இதனால் கொதிப்படைந்த நயன் தனுஷை தாக்கி கடிதம் எழுதினார். அதற்கு பின்னணியில் விக்னேஷ்தான் இருப்பதாக சொல்லப்படுகிறது.
முடிந்த பிரச்னை: ஒருவழியாக ஆவணப் படமும் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. மேலும் தனுஷ் அனுமதி மறுத்தும் கிட்டத்தட்ட 37 நொடிகள்வரை நானும் ரௌடிதான் ஷூட்டிங் ஸ்பாட் ஃபுட்டேஜ் பயன்படுத்தப்பட்டிருந்தது. இதனால் தனுஷ் கொஞ்சம் கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் விக்னேஷ் சிவனுக்கும், நயனுக்கும் எதிராக தனுஷின் ரசிகர்களும் கோதாவில் குதிக்க ஆரம்பித்தனர். ஒருவழியாக அந்தப் பிரச்னையின் வீரியம் இப்போது கொஞ்சம் குறைய ஆரம்பித்திருக்கிறது.
ஆர்.ஜே.பாலாஜி பேட்டி: இந்நிலையில் பிரபல ஹீரோவும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "ஒருநாள் மிட் நைட் 1.30 மணி இருக்கும். அப்போது ஒரு ஃபோன் கால் வந்தது. தூக்க கலக்கத்தில் எடுத்து பேசியபோது, எதிர்முனையில், 'ஹலோ நான் விக்னேஷ் சிவன். போடா போடி இயக்குநர்' என்று கூறினார். உடனே கோபமாக, 'நீங்கள் யாராக இருந்தால் என்ன. நான் என் குடும்பத்துடன் இருக்கிறேன். நள்ளிரவு 1.30 மணிக்கு எப்படி நீங்கள் ஃபோன் செய்யலாம் என்று கோபமாக திட்டிவிட்டு வைத்துவிட்டேன். பிறகு மறுநாள் காலை ஃபோன் செய்து பொறுமையாக பேசினேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











