Sorgavaasal Box Office Day 2: புயலில் தப்பித்ததா ஆர்.ஜே. பாலாஜியின் சொர்க்கவாசல்.. என்னாச்சு வசூல்?
சென்னை: ஆர்.ஜே. பாலாஜி, செல்வராகவன், கருணாஸ், நட்டி, சானியா அய்யப்பன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நவம்பர் 29ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் சொர்க்கவாசல். படம் கடந்த 1999ஆம் ஆண்டு சென்னை மத்திய சிறையில் நடப்பதைப்போல் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கைதிகளுக்கும் ஜெயிலர்களுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை, அதனால் காவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட கைதிகள், கைதிகளால் கொல்லப்பட்ட காவலர்கள், கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல்கள் என பல கோணங்களில் படம் நகர்வதால், படம் சுவாரஸ்யமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நேற்று அதாவது, நவம்பர் 30ஆம் தேதி ஃபென்ஞல் புயல் காரணமாக சென்னை, கடலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல் இடங்களில் பல தியேட்டர்கள் செயல்பட்டது, பல தியேட்டர்கள் அதிகாரப்பூர்வமாக காட்சிகளை ரத்து செய்தது. இதனால் படத்தின் வசூலில் தாக்கம் ஏற்பட்டது.
முதலில் ஒரு நடிகராக ஆர்.ஜே. பாலாஜி அடுத்த கட்டத்திற்கு தன்னை பரிணாமப்படுத்திக் கொண்டுள்ளார் என்றுதான் கூறவேண்டும். படத்தின் முதல் காட்சியில் இருந்து க்ளைமேக்ஸ் வரை, ஆர்.ஜே. பாலாஜி, பாராட்டத்தகுந்த நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். வழக்கமாகவே ஆர்.ஜே. பாலாஜி படம் என்றால், நகைச்சுவை இருக்கும் என்ற எண்ணத்தை ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அவர் உருவாக்கி வைத்துள்ளார். ஆனால் இந்தப் படத்தின் மூலம், அப்படியான பிம்பங்களையெல்லாம், தகர்த்து, தன்னால் மிகவும் இருக்கமான நடிப்பினையும் வெளிப்படுத்த முடியும் என நிரூபித்துள்ளார்.

அதேபோல் செல்வராகவன் சாணி காகிதம் போன்ற படத்திற்குப் பின்னர், ராயன் படத்தில் கதாபாத்திரமாக அவர் பொருந்திப் போனார். ஆனால் இந்தப் படத்தில் சிகா என்கின்ற சிகாமணி கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். இவரது நடிப்பு மற்றும் உடல் மொழி, அவரது கதாபாத்திரத்தை கண்முன் நிறுத்துகின்றது. அதேபோல் இவர் பேசும் வசனங்கள், வன்முறையாளனாக அடையாளப்படுத்தப்படும் சிகாமணி கதாபாத்திரத்தின் மற்றொரு பக்கத்தினை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது.
படக்குழு: படத்தின் இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் படத்தின் ஒரு காட்சிகூட படத்தில் இருந்து அந்நியப்பட்டுவிடக்கூடாது என பார்த்து பார்த்து காட்சிப் படுத்தியுள்ளார். அதேபோல் படத்தின் திரைக்கதையில் சித்தார்த் விஸ்வநாத்துடன் தமிழ் பிரபா மற்றும் அஸ்வின் ரவிச்சந்திரன் இணைந்து பணியாற்றியுள்ளனர். இவர்கள் மூவரின் திரைக்கதைப் பாணியானது படத்தின் தரத்தினை உலக சினிமா அளவிற்கு உயர்த்தியுள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் அட்டகாசமான திரைக்கதைக்கு ஏற்றவாறு, தனது அசாத்திய எடிட்டிங்கினால் படத்தின் தரத்தை பலமடங்கு உயர்த்தியுள்ளார் ஆர்.கே. செல்வா.

கேமரா & மியூசிக்: பிரின்ஸ் ஆண்டர்சன்னின் ஒளிப்பதிவு ஜெயிலின் முகப்பு தொடங்கி, மூலை முடுக்கெல்லாம் நமக்கு காண்பிக்கின்றது. இதற்கு முன்னர் ஜெயில் என்றால், தமிழ் சினிமாவில் சில படங்களில் உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியுள்ளனர். ஆனால் இந்தப் படம் முழுவதும் ஜெயிலில் நடப்பதால், ஒளிப்பதிவில் அட்டகாசப்படுத்தியுள்ளார். கிரிஸ்டோ சேவியரின் படத்தின் பின்னணி இசை படத்துடன் நம்மை ஒன்றச் செய்கின்றது.
வசூல்: படம் சிறிய படம் என்பதால் பெரிய ஓபனிங் இருக்காது என படத்தினைத் தயாரித்த ஸ்வைப் ரைட் நிறுவனத்திற்கும், படத்தை வெளியிட்டுள்ள ட்ரீம் வாரியர்ஸ்க்கும் நன்றாகவே தெரியும். ஆனால் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு இந்தப் படத்திற்கு கிடைத்து, ரசிகர்கள் மனதில் படம் நீங்கா இடம் பிடிக்கும் என படக்குழு நம்புகின்றது. படத்திற்கு வரும் காலங்களில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்புகின்றது. இதனால் வார இறுதி நாட்களிலும், வார நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கின்றது. ஃபென்ஞல் புயல் காரணமாக மேற்குறிப்பிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பல தியேட்டர்களில் காட்சிகள் அதிகாரப்பூர்வமாகவே ரத்து செய்யப்பட்டது. இப்படியான நிலையில் செர்க்கவாசல் படம் முதல் இரண்டு நாட்களில் உலகம் முழுவதும் ரூபாய் 2 கோடிகள் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.



Click it and Unblock the Notifications











