விஜய்க்கு எதிராக நெய்வேலியில் போராட்டம் நடத்திய பாஜகவினர்.. கடும் கண்டனம் தெரிவித்த ஃபெஃப்சி!
Recommended Video
சென்னை: விஜய் பட ஷுட்டிங்கிற்கு எதிராக நெய்வேலியில் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு பெஃப்சி தலைவர் ஆர்கே செல்வமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெய்வேலி என்எல்சி சுரங்கத்தில் மாஸ்டர் படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் படமாக்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த புதன் கிழமை மாலை ஷுட்டிங்கில் பங்கேற்றிருந்த விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக அவரது வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சோதனைகள் நிறைவு பெற்றன.

விஜய் படத்திற்கு எதிர்ப்பு
இதனை தொடர்ந்து நடிகர் விஜய் மாஸ்டர் பட ஷுட்டிங்கில் நேற்று மீண்டும் பங்கேற்றார். அப்போது அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் என்எல்சியில் ஷுட்டிங் நடத்த எப்படி அனுமதிக்கலாம் என கூறி 10க்கும் மேற்பட்ட பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் என்எல்சியில் படப்பிடிப்பு நடத்தப்படக்கூடாது என தெரிவித்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ரசிகர்கள் மீது தடியடி
இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பாஜகவினரின் போராட்டத்தை அறிந்த விஜயின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக அங்கு குவிந்தனர். இதனால் பரபரப்பு மேலும் அதிகரித்தது. கூடவே விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் பங்கேற்று விஜய்க்கு ஆதரவாகவும் பாஜகவுக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் தடியடி நடத்தி விரட்டப்பட்டனர்.

ஃபெஃப்சி கடும் கண்டனம்
இந்நிலையில் பாஜகவினரின் இந்த செயலுக்கு திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளமான ஃபெஃப்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஃபெஃப்சி தலைவர் ஆர்கே செல்வமணி சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், விஜய்க்கு எதிரான பாஜகவின் போராட்டம் சரியல்ல என கண்டனம் தெரிவித்தார்.

தமிழகத்துக்கு இழப்பு
மேலும், விஜய் மட்டுமே தமிழ்நாட்டில் ஷுட்டிங் நடத்துகிறார். இதுபோன்ற பிரச்சனைகளால்தான் பெரிய நடிகர்கள் சிலர் வெளி மாநிலங்களில் ஷுட்டிங் நடத்துகின்றனர். கடந்த 25 வருடங்களில் 16 படப்பிடிப்புகள் என்எல்சியில் நடந்துள்ளது. இதுபோன்ற போராட்டங்கள் எதிர்ப்புகளால் வெளி மாநிலங்களில் ஷுட்டிங் நடத்துவதால் தமிழக தொழிலாளர்களுக்கு இழப்பு ஏற்படுகிறது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி
கடந்த ஆண்டில் மட்டும் இதுபோன்ற பிரச்சனைகளால் வெளி மாநிலங்களுக்கு சென்றதால் 1000 கோடி ரூபாய் பணம் வெளியே சென்றிருக்கிறது. நெய்வேலியில் விஜய் படத்திற்கு எதிராக பாஜக போராட்டம் நடத்தியது நியாயமற்றது. தமிழ் சினிமாவை அரசியல் காழ்ப்புணர்ச்சி பாதிக்கிறது. தமிழ் திரைப்படத்துறையை எதிரி போல பார்க்கும் நிலை உருவாகிவிட்டது.

லாபம் நஷ்டம்
தமிழ் சினிமா சிறிய பிரச்சனையில் இருந்து பெரிய பிரச்சனை நோக்கி செல்கிறது.திரைப்படத்தின் லாபம் நஷ்டம் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரை மட்டுமே சாரும். படத்தின் லாப நஷ்டத்தில் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தொடர்பு இல்லை. திரைப்பட இயக்குநர் ஏஆர் முருகதாஸ் வீட்டில் சிலர் அத்துமீறி நடந்துள்ளனர்.

அரசுக்கு கோரிக்கை
வரவுக்கும் செலவுக்கும் தொடர்பு இல்லாத தொழில் முறை உருவாகி உள்ளது. பொய் கணக்கு மூலம் திரைத்துறையை பெரிய துறையாக மாற்ற முயற்சி நடைபெறுகிறது. எந்த கட்டுப்பாடும் இல்லாத துறையாக திரைப்படத்துறை மாறிவிட்டது. தமிழக அரசு திரைப்படத்துறை மேம்பாட்டு நிறுவனம் தொடங்க வேண்டும். டிக்கெட் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு இயக்குநரும் பெஃப்சி தலைவருமான ஆர்கே செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











