அஜித், நயன்தாரான்னு இல்லை.. யாரா இருந்தாலும் அதை கண்டிப்பா பண்ணனும்.. ஆர்.கே. செல்வமணி ஆதங்கம்!
சென்னை: தமிழ் சினிமாவில் இயக்குநரும் தயாரிப்பாளருமாக இருக்கும் ஆர்.கே .செல்வமணி ஃபெப்சி சங்க தலைவராகவும் பதவி வகித்து வருகிறார். சமீபத்தில் சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் ஏழுமலை எனும் சண்டை பயிற்சியாளர் உயிரிழந்த நிலையில், இந்தியன் 2 படத்திலிருந்து சர்தார் 2 வரை 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார்.
மேலும், நடிகர்கள் பட புரமோஷன்களை தவிர்க்கக் கூடாது என்றும் படத்தில் நடிப்பது மட்டுமே நடிகர்களின் கடமை இல்லை என்றும் புரமோஷன் செய்து அந்தப் படத்தை ஓட வைப்பதும் நடிகர்களின் கடமைதான் என்றும் ஆர்.கே. செல்வமணி கூறியிருந்தார்.

இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், அசோக் செல்வன் விவகாரம் பற்றியும் நடிகர் தனுஷ், விஷால் உள்ளிட்டோர்களின் பிரச்சனை குறித்தும் பேசியுள்ளார்.
90 சதவீதம் சம்பளம்: ஒரு படத்தின் பட்ஜெட்டுக்கு 30% சம்பளமாக சென்றால் அந்த படம் நன்றாக வரும். 50 சதவீதம் என்றால் கூட பரவாயில்லை, ஆனால் ஒரு சிலர் 90 சதவீதம் சம்பளமாக கேட்கும் நிலையில்தான் தமிழ் சினிமா தள்ளாடி கொண்டிருப்பதாக அதிர்ச்சி தகவலை ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.
தனுஷ் விவகாரம்: நடிகர் தனுஷ் தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் தொகையை வாங்கிக் கொண்டு நடிக்காமல் ஏமாற்றி வருவதாக தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக அளித்த நோட்டீஸ் அவர்களின் இயலாமையை தான் காட்டுகிறது என்றும் முன்கூட்டியே நடிகர் சங்கம் மற்றும் தனுஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது என தனது கருத்தை ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.
விஷாலுக்கு பொறுப்பு வேண்டும்: நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்க பணத்தை எடுத்துக் கொடுத்ததில் சட்டத்திற்கு புறம்பாக அவர் எந்தவொரு தவறையும் செய்யவில்லை என்றாலும், தர்மத்திற்கு எதிராக அவர் செய்துள்ளார். அதை எப்படியாவது 12 கோடிக்கு 20 கோடியாக மீட்டு விடலாம் என்று தான் நினைத்தார். ஆனால், அதை அப்படியே விட்டு விட்டு நகர்வது சரியல்ல. விஷாலுக்கு அந்தப் பொறுப்பு வேண்டும் எனக் கூறியுள்ளார்.
அசோக் செல்வன் முதல் அஜித் வரை: எமக்குத் தொழில் ரொமான்ஸ் படத்தில் ஹீரோவாக நடித்த அசோக் செல்வன் அந்த படத்தின் புரமோஷனுக்கு வராத நிலையில், தயாரிப்பாளர் கொந்தளித்தது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அசோக் செல்வன் கண்டிப்பாக புரமோஷனுக்கு வந்திருக்க வேண்டும் என ஆர்.கே. செல்வமணி தெரிவித்த நிலையில், அஜித், நயன்தாரா எல்லாம் தவிர்த்து வருகிறார்களே என்கிற கேள்வியை எழுப்ப, அஜித், நயன்தாரான்னு இல்லை, யாராக இருந்தாலும் தங்கள் படத்தை புரமோட் செய்ய வேண்டும். அது அவர்களுடைய கடமை என்று ஆர்.கே. செல்வமணி கூறியுள்ளார்.
3 நாள் தான் ஓடுது: வெள்ளிக்கிழமை படம் வெளியானால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு என 3 நாள் தான் படம் ஓடுது. பொறுமையாக திங்கட்கிழமை வந்து புரமோஷன் செய்தாலே படம் செத்து விடும் எனக் காட்டமாக கூறியுள்ளார். மேலும், தமிழ் சினிமா தற்போது மோசமான நிலையில், இருப்பதாகவும் நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம், முன்னணி நடிகர்கள் எல்லாம் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











