படங்களை தியேட்டரில்தான் பார்க்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.. ஓடிடிக்கு ஆர்கே செல்வமணி ஆதரவு!
சென்னை: ஓடிடி உள்ளிட்ட அனைத்து வகை தொழில்நுட்பங்களையும் திரைப்படங்களை ரிலீஸ் செய்ய பயன்படுத்தலாம் என ஃபெஃப்ஸி தலைவர் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக பல்வேறு தொழிலையும் முடக்கிப் போட்டு வைத்துள்ளது. இதில் சினிமா துறையும் குறிப்பிடத் தகுந்தது.
இந்நிலையில் சென்னை வடபழனியில் உள்ள ஃபெப்ஸி அலுவலகத்தில் அதன் தலைவரான ஆர்கே செல்வமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

ரூ.1000 கோடி நஷ்டம்
அப்போது திரைப்படத் தொழிலாளர்கள், இயக்குநர் சங்கத்துக்கு ரூ.1 கோடி நிவாரணமாக வழங்கிய நடிகர் சிவக்குமார், சூர்யாவுக்கு ஃபெப்ஸி சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், ஊரடங்கு காலத்தில் திரைத்துறைக்கு ரூ.1,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அவசியமில்லை
அதோடு திரைப்படங்களை திரையரங்குகளில் தான் திரையிட வேண்டும் என்பதில்லை என்று கூறிய ஆர்கே செல்வமணி, திரைப்படங்களை தியேட்டரில்தான் பார்க்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றும் கூறினார்.

முரண்பாடுகள் சகஜம்
மேலும் ஓடிடி உள்ளிட்ட அனைத்து வகை தொழில்நுட்பங்களையும் திரைப்பட ரிலீஸ்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் கூறினார். திரைத்துறையில் முரண்பாடுகள் இருப்பது சகஜம் தான் என்ற அவர், அதனை பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்றார்.

அரசு அனுமதிக்க வேண்டும்
திருட்டுத் தனமாக ஷூட்டிங் எடுக்கவிரும்பவில்லை என்ற அவர் வரும் ஒன்றாம் தேதி முதல் வெளிப்படையாக ஷூட்டிங் நடத்தவும், வெளி இடங்களுக்கு பயணம் செல்லவும் தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என்று ஆர்கே செல்வமணி கோரிக்கை விடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











