RK Suresh: ஆருத்ரா மோசடியில் ஈடுபட்டாரா ஆர்.கே. சுரேஷ்? விசாரணை வளையத்துக்குள் சிக்கியது எப்படி?
சென்னை: ஆருத்ரா கோல்டு நிறுவனம் வாடிக்கையாளர்களை ஏமாற்றி மோசடியில் ஈடுபட்ட நிலையில், அதில், நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கும் சம்பந்தம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் அதிக சதவீதம் வட்டி தருவதாக லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றி மோசடி செய்தது அம்பலம் ஆகி உள்ளது.
வாடிக்கையாளர்கள் அளித்த புகார் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆருத்ரா மோசடி
சென்னை, அமைந்தகரையில் அமைந்துள்ள ஆருத்ரா நிறுவனம் முதலீடு செய்பவர்களுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் வட்டி தருவதாக அறிவித்து ஏமாற்றியிருப்பது அம்பலம் ஆகி உள்ளது. அவர்கள் கொடுத்த பொய்யான நம்பிக்கையை நம்பி, லட்சக்கணக்கானோர் முதலீடு செய்தனர். ஆனால், முதலீட்டாளர்களுக்குப் பணத்தை ஆருத்ரா நிறுவனம் திரும்பச் செலுத்தவில்லை.

லட்சக்கணக்கானோர் ஏமாற்றம்
லட்சக்கணக்கான மக்கள் ஆருத்ரா நிறுவனத்தை நம்பி மோசம் போயுள்ளனர். அவர்கள் அளித்த புகார் மீது பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை கூடுதல் டி.ஜி.பி. அபின் தினேஷ் மோடக், ஐ.ஜி. ஆசியம்மாள், எஸ்.பி. மகேஷ்வரன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைமறைவு
வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் அந்நிறுவனத்தின் சொத்துக்களை முடக்கி உள்ளனர். மோசடி விவகாரம் அம்பலமான நிலையில், மேலாண் இயக்குநர்கள் ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாட்டில் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கைது செய்தனர்
இந்த வழக்கு விசாரணையில் ஆருத்ரா நிறுவனத்தின் இயக்குநரும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகியுமான ஹரீஷ் மற்றும் மற்றொரு இயக்குநரான மாலதி ஆகியோரை கடந்த வாரம் கைது செய்து நீதிமன்ற காவலில் அடைத்தனர். அதே நேரத்தில், இந்த வழக்கில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ரூசோ என்பவரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தியதில் ஏகப்பட்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆர்கே சுரேஷ்
ரூசோவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகரும் பாஜக கலைப் பிரிவு மாநில நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ்க்கும் இந்த மோசடியில் தொடர்பிருப்பதாக அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஆர்.கே. சுரேஷிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











