முக்கிய சாலைக்குத் தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயர்.. சொந்த ஊரில் அசத்திய மேயர்!
பாட்னா: தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் பெயரை, சாலை ஒன்றுக்கு சூட்டியுள்ளனர்.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14 ஆம் தேதி, தனது வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அவரது இந்த முடிவு, பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மன அழுத்தம்
கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கைக் கதையில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தவர், சுஷாந்த் சிங். அவர் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவர் மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்தனர். அவர் தற்கொலைக்கான காரணம் பற்றி மும்பை பாந்த்ரா போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெபோடிசம்
நடிகைகள் ரியா சக்கரவர்த்தி, இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி உட்பட பல நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், சுஷாந்துடன் நடித்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். சுஷாந்த் சிங் மறைவை அடுத்து பாலிவுட்டில் நெபோடிசம் குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. திறமையில்லாத சினிமா பிரபலங்களின் வாரிசுகளால், மற்றவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பலர் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

அறக்கட்டளை
இந்நிலையில், சுஷாந்த் சிங் குடும்பத்தினர், அவர் பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்க இருப்பதாக, அறிவித்திருந்தனர். அவர் நினைவை கவுரவிக்கும் விதமாக அவருக்குப் பிடித்த சினிமா, அறிவியல், விளையாட்டு துறைகளின் இளம் திறமையாளர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக, சுஷாந்த் சிங் ராஜ்புத் அறக்கட்டளை தொடங்க இருக்கிறோம் என்று கூறியிருந்தனர்.

சொந்த ஊரில்
இதற்கிடையே, சுஷாந்த் சிங்கின் சொந்த ஊரில், ஒரு சாலைக்கு அவர் பெயரை சூட்டியுள்ளனர். தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சிங், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள பூர்னியா மாவட்டத்தில் உள்ள மால்டிகா கிராமம் அவரது சொந்த ஊர். சுஷாந்த் சிங்கை கவுரவிக்கும் விதமாக, மதுபானியில் இருந்து மதா சவுக் செல்லும் சாலைக்கு அவர் பெயரைச் சூட்ட புர்னியா மேயர், சவிதா தேவி முடிவு செய்தார்.

ரவுண்டானா
அதன்படி, இனி, அந்த சாலை சுஷாந்த் சிங் ராஜ்புத் சாலை என்று அழைப்படும் என்று அறிவித்தார். போர்ட் நிறுவன ரவுண்டானாவுக்கும் சுஷாந்த் சிங் ராஜ்புத் சவுக் என்று பெயரை மாற்றினார். இதை அவர் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். இது தொடர்பான வீடியோவும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











