Manikandan: பிரபல இயக்குநர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை... திரையுலகினர் அதிர்ச்சி!
மதுரை: காக்கா முட்டை திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மணிகண்டன். முதல் படத்திலேயே தேசிய விருது வென்று அசத்திய மணிகண்டன், தொடர்ந்து தனது படைப்புகளால் கவனம் ஈர்த்து வருகிறார். இந்நிலையில் உசிலம்பட்டியில் உள்ள மணிகண்டனின் வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குநர் மணிகண்டன் வீட்டில் கொள்ளை
தமிழ்த் திரையுலகில் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் மணிகண்டன். 2015ம் ஆண்டு வெளியான காக்கா முட்டை மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், முதல் படத்துக்காக தேசிய விருது வென்றார். தொடர்ந்து கிருமி, குற்றமே தண்டனை, விஜய் சேதுபதி நடிப்பில் ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய படங்களை இயக்கினார்.

2022ம் ஆண்டு வெளியான கடைசி விவசாயி விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பைப் பெற்றது. விஜய் சேதுபதியுடன் நல்லாண்டி என்ற முதியவரும் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படமும் தேசிய விருது வென்று அசத்தியது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இயக்குநர்கள் மிஷ்கின், ஹெச் வினோத் உள்ளிட்ட பலர் மணிகண்டனுக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.
இவர்களில் இயக்குநர் மிஷ்கின், உசிலம்பட்டியில் உள்ள இயக்குநர் மணிகண்டனின் வீட்டிற்கே நேரில் சென்றார். மேலும் ஆளுயர மாலை வாங்கி மணிகண்டன் கழுத்தில் போட்ட மிஷ்கின், கடைசி விவசாயி படத்தை பார்த்து நெகிழ்ந்துவிட்டதாக பாராட்டினார். இந்நிலையில் உசிலம்பட்டியில் உள்ள மணிகண்டனின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகேயுள்ள விளாம்பட்டி தான் மணிகண்டனின் சொந்த ஊர். இவரது சொந்த வீடும் அலுவலகமும் உசிலம்பட்டி எழில் நகரில் உள்ளது. கடந்த 2 மாதங்களாக தனது அடுத்த படத்தின் வேலைக்காக தனது குடும்பத்தினருடன் சென்னை வந்துள்ளார் மணிகண்டன். இதனையடுத்து உசிலம்பட்டியில் உள்ள மணிகண்டன் வீட்டில் யாரும் இல்லாததைத் தெரிந்துக் கொண்ட மர்ம நபர்கள், பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.
உசிலம்பட்டியில் உள்ள மணிகண்டன் வீட்டில் அவர் வளர்த்து வரும் நாய்க்கு டிரைவர்கள் ஜெயக்குமார், நரேஷ்குமார் இருவரும் உணவு வைக்கச் சென்றுள்ளனர். அப்போது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியான அவர்கள், கொள்ளைச் சம்பவம் குறித்து உசிலம்பட்டி போலீஸாருக்கும் இயக்குநர் மணிகண்டனுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையின் முதற்கட்ட தகவல்களின் படி, கடைசி விவசாயி திரைப்படத்திற்காக மத்திய அரசு வழங்கிய தேசிய விருதுக்கான இரு வெள்ளி பதக்கங்கள், பீரோவில் இருந்த ரூ.1 லட்சம் பணம், 5 சவரன் நகை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இயக்குநர் மணிகண்டன் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











