பின்னணி பாடகிகள் வீட்டில் 150 பவுன் கொள்ளை: திருடர்களுக்கு வலைவீச்சு!
சென்னை: திருவான்மியூர் பகுதியில் பின்னணி பாடகிகள் வீட்டில் நூதனமுறையில் 150 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சென்னையை அடுத்த திருவான்மியூர் வால்மீகி சிவார்ட் சாலையை சேர்ந்தவர் ஓ.எஸ்.மணி (வயது67). இவர் ஓய்வு பெற்ற சுங்க இலாகா அதிகாரி. இவருடைய மனைவி ஹேமலதா (62). இவர்களுக்கு சாருலதா, மதுமிதா என்ற மகள்கள் உள்ளனர். இவர்கள் சினிமா பின்னணி பாடகிகளாக உள்ளனர்.
நேற்று மாலை மதுமிதா, சாருலதா ஆகியோர் வெளியே சென்றிருந்தனர். அப்போது மணியும் வெளியே சென்று வருவதாக கூறி சென்றார்.
வீட்டில் ஹேமலதா மட்டும் தனியாக இருந்தபோது, மின்சார வயர்களை பழுதுபார்ப்பதாகக் கூறி இரு இளைஞர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். ஹேமலதாவுக்கு கண்பார்வை சற்று குறைவு என்பதை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி ரூ 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் 150 பவுன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றனர்.
மணி வீட்டுக்கு வந்த பின்னர் மின்சார வயர்களை சரி செய்ய இருவர் வந்து சென்றதை ஹேமலதா தெரிவித்தார். உடனே மணி பீரோவைப் பார்த்தார். அது திறந்து கிடந்தது. அதில் இருந்த 150 பவுன் தங்க மற்றும் வைர நகைகள், மற்றும் ரூ.50 ஆயிரம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றி திருவான்மியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











