Robo Shankar: புரட்டாசி முதல் வெள்ளி.. துக்க வீட்டை லைவ் போடூவீங்களானு சொன்ன பிரபலத்துக்கு எதிர்ப்பு
சென்னை: ரோபோ சங்கர் மறைவுக்கு சின்னத்திரை பிரபலங்கள் தொடங்கி வெள்ளித்திரை பிரபலங்கள், கட்சி பேதமின்றி அரசியல் கட்சித் தலைவர்கள், ரசிகர்கள் பொதுமக்கள் என பலரும் ரோபோ சங்கரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும்போது, அதிமுகவைச் சேர்ந்த கிஷோர் கே சுவாமி தனது எக்ஸ் தளத்தில் இது புரட்டாசி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை, ஊடகங்கள் ரோபோ சங்கரின் மறைவு குறித்து லைவ் செய்வது, வீட்டிற்குள் கெட்ட அதிர்வுகளை உருவாக்கிக் கொண்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார். அதற்கு பலரும் அவருக்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள்.
கடந்த 16ஆம் தேதி ஏற்பட்ட திடீர் மயக்கத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் நேற்று அதாவது, செப்டம்பர் 18ஆம் தேதி இரவு 09.05 மணிக்கு சிகிச்சைப் பலனின்றி, மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மறைவு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நேற்று இரவே தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் தனுஷ் உள்ளிட்டோர் ரோபோவின் வீட்டிற்குச் சென்று, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.

அஞ்சலியும் இரங்கலும்: இன்று அதிகாலை முதல் திரைப்பிரபலங்கள், சின்னத்திரைப் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தற்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய்பாஸ்கர், நடிகர் மற்றும் மக்கள் நீதிமய்யம் தலைவரும் எம்.பியுமான கமல்ஹாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி பேதமின்றி அவருக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

கிஷோர் கே சுவாமி: இந்நிலையில் அதிமுகவைச் சேர்ந்த கிஷோர் கே சுவாமி தனது எக்ஸ் பக்கத்தில் ரோபோ சங்கர் மறைவுக்கு ஊடகங்கள் நேரலை செய்து வருவதை விமர்சித்துள்ளார். அவரது பதிவில், " மறைந்த திரைப்பட நடிகர் ரோபோ சங்கரின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது தான். அதே நேரத்தில், புரட்டாசி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை அன்று, காலை வேளையில், ரோபோ சங்கரின் மரணச் செய்தியை வருத்தமான வயலின் இசையுடன் நேரலையில் ஒளிபரப்புவது என்பது, தமிழகத்தின் பல லட்சம் வீடுகளில் எதிர்மறை அதிர்வுகளை உருவாக்குகிறது.
புரட்டாசி வெள்ளிக்கிழமை: இந்த அணுகுமுறை வீட்டிற்குள் துக்ககரமான சூழலை வரவேற்பது போன்றது. புரட்டாசி வெள்ளிக்கிழமை காலையில், உயிரிழந்த ரோபோ சங்கரின் வீட்டில் இருந்து வரும் சோகமான காட்சிகளை சோகமான இசைகளுடன் நேரடி ஒலிபரப்புடன் பார்ப்பது ஏற்புடையதல்ல. தமிழக ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களின் இத்தகைய செயல்பாடுகள் சமூகத்திற்கு நல்லதல்ல என்பதை உணரவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவுக்கு பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் கண்டனங்களுக்கும் கிஷோர் கே சுவாமி பதில் அளித்து வருகிறார். சிலரோ நாட்டின் உயரிய பொறுப்பில் இருப்பவர் இறந்திருந்தாலும் இப்படித்தான் புரட்டாசி வெள்ளிக்கிழமை என்று பேசிக்கொண்டு இருப்பாரா? என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











