TVK நிர்வாகியைச் சந்தித்த ரோபோ ஷங்கர் மாப்பிள்ளை.. விஜய்யின் தவெகவில் இணைந்து விட்டாரா?
சென்னை: தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை பிரபலங்களின் குடும்பங்களில் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்படுகிற குடும்பங்களில் ஒன்றாக இருப்பது நடிகர் ரோபோ ஷங்கரின் குடும்பம். இவர் விஜய் தொலைக்காட்சியில் இருந்த காலகட்டத்தில் இருந்து சினிமாவிற்கு வந்த பின்னரும் கூட அவரது குடும்பத்தை ரசிகர்களும் இணையவாசிகளும் கவனித்து வருகிறார்கள். இந்நிலையில் ரோபோ ஷங்கரின் மாப்பிள்ளை கார்த்திக் தவெக நிர்வாகியும் பிரபலமுமான ராஜ் மோகனைச் சந்தித்து அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரோபோ ஷங்கர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு மற்றும் அது இது எது போன்ற காமெடி ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டு தனது நகைச்சுவைத் திறனை வெளிப்படுத்தி மக்கள் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பையும் பெற்றார். அதன்பின்னர் ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்கா ரசிகர்களுக்கு விஜய் தொலைக்காட்சி மூலமாக அறிமுகமானார். இந்த தம்பதியருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதேபோல் அவர்களின் மகள் இந்திரஜா ஷங்கர், நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தில் பலரது கவனத்தை ஈர்த்த பாண்டியம்மா கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரத்தின் மூலம் இந்திராஜாவுக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. படத்தில் விஜய், இவரைப் பார்த்து பேசும் உருவக்கேலி வசனங்கள் பொதுவெளியில் சர்ச்சையாக எல்லாம் மாறியது. உருவக்கேலி வசனத்தை பேசிய பின்னர் படப்பிடிப்புத் தளத்திலேயே விஜய் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக இந்திரஜா தெரிவித்திருந்தார். அதன் பின்னர் இயக்குநர் ஷங்கரின் மகள், அதிதி ஷங்கர் அறிமுகமான விருமன் படத்திலும் நடித்தார்.
திருமணமும் குழந்தையும்: இந்திரஜா ஷங்கர் தனது தாய் மாமனான கார்த்திக்கையே திருமணம் செய்து கொண்டார். இவர் ரோபோ ஷங்கரின் மனைவி பிரியங்காவின் உடன் பிறந்த தம்பி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதேபோல் இவர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் இவர்கள் எடுக்கும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது. இவர்களின் வீடியோக்கள் அவ்வப்போது இணையவாசிகள் மத்தியில் கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இவர்களின் குழந்தைக்கு கமல்ஹாசன் நட்சத்திரன் என பெயர் வைத்தார்.

தவெகவில் இணைந்து விட்டாரா : இந்நிலையில் இந்திரஜாவின் கணவர் கார்த்திக் பிரபலமும் தவெக நிர்வாகியுமான ராஜ் மோகனைச் சந்தித்துள்ளார். அப்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து குறிப்பில், " அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் "மக்களை ஊக்குவிக்கும் குரல், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர், ஒவ்வொரு சொற்களாலும் இதயங்களை நெகிழ வைக்கும் பேச்சாளர். உங்கள் பயணம் மேலும் பல மக்களை உயர்த்தவும், அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும். உங்கள் பயணம் தொடரட்டும். இந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையட்டும்" என குறிப்பிட்டுள்ளார். இவரது இந்த பதிவை பார்த்த இணையவாசிகள் ரோபோ ஷங்கரின் மருமகன் விஜய்யின் தவெகவில் இணைந்துவிட்டாரா? என்ற கேள்வியைக் கேட்டு வருகிறார்கள். அதே நேரத்தில் சிலர் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல தவெகவில் இணைந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் பதிவிட்டு வருகிரார்கள்.


Click it and Unblock the Notifications











