Anirudh: கூலிக்கு அப்புறம்தான் Hukum இசை நிகழ்ச்சி.. ஸ்பெஷலா கவனிக்க தேதி குறித்த அனிருத்!
சென்னை: இசையமைப்பாளர் அனிருத் தற்போது தமிழ் திரையிசையின் உச்சத்தில் உள்ளார். வேறு யாராவது இசையமைப்பாளர் இசையில் ஒரு நல்ல பாடல் வந்தால் கூட, ரசிகர்கள் தாங்களாகவே இது அனிருத் பாடல் என யோசிக்கும் அளவுக்கு வளர்ந்து உயர்ந்து நிற்கிறார். பல்வேறு நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்தி வந்த அனிருத், சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்திலும் இசை நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டார். இதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. ஆனால் கடைசியில், தேதி மாற்றப்பட்டுள்ளது, பார்க்கிங் வசதி போதுமானதாக இல்லை என்பதே அதன் காரணம் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் இசை நிகழ்ச்சி எப்போது நடைபெறும் என்ற அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
'ராக் ஸ்டார்' அனிருத்தின் இசை நிகழ்ச்சி இதற்கு முன் கண்டிராத வகையில், பிரம்மாண்டமான முறையில் நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும், முன்பதிவு பற்றிய விவரங்களையும் அனிருத் வெளியிட்டுள்ளார். பான் இந்திய இசையமைப்பாளரான அனிருத் - ரசிகர்களின் தொடர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சென்னையில் இதற்கு முன் இசை ரசிகர்கள் பார்த்திராத வகையில் புதிய இசை அனுபவத்தை வழங்குவதற்காக பல ஏற்பாடுகளை செய்து வருகிறார். இந்த இசை நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதியன்று கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் எனும் பகுதியில் அமைந்துள்ள மார்க் சொர்ணபூமி ( MARG SWARNABHOOMI ) எனும் இடத்தில் நடைபெறுகிறது.

அனிருத் இசை நிகழ்ச்சி: பல்லாயிரக்கணக்கில் திரளும் இசை ரசிகர்களின் பாதுகாப்பு, பார்க்கிங், என ஏராளமான வசதிகளுடன் பிரம்மாண்டமான முறையில் இசை நிகழ்ச்சி நடைபெறும் வகையில் விரிவான ஏற்பாடுகளை இசை நிகழ்ச்சியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அனிருத் வெளியிட்டுள்ளார்.
புக்கிங்: அத்துடன் இந்த இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை District எனும் பிரத்யேக ஆப்( App)பில் வரும் ஆகஸ்ட் 4 ஆம் தேதி மாலை 3 மணி அளவில் தொடங்குகிறது. அதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. இசை ரசிகர்கள் இதற்கு முன் இப்படி ஒரு பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி அனுபவத்தை அனுபவித்திராத வகையில் பிரத்யேக ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் செய்து வருகிறார்கள். குறிப்பாக ஏராளமான இசை ரசிகர்களின் வாகனங்களுக்கான பார்க்கிங் வசதி விசாலமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் இசை ரசிகர்களின் உற்சாகத்தையும், கொண்டாட்டத்தையும் உளவியல் ரீதியாக மேம்படுத்தும். மேலும் இந்த நிகழ்ச்சி - இசை ரசிகர்களுக்கான ஆகச் சிறந்த முன்னுதாரணமாக திகழும் என்றும் ஒருங்கிணைப்பாளர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.

பிரம்மாண்டமான ஏற்பாடு: 'ராக்ஸ்டார்' அனிருத் - பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் - பிரம்மாண்டமான மற்றும் கூடுதல் வசதிகள் - ஒப்பற்ற இசை அனுபவம் - ஆகியவை ஒன்றிணைந்திருப்பதால் அனிருத்தின் Hukum மிகப் பிரம்மாண்டமான வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனிடையே பல உலக நாடுகளில் நடைப்பெற்ற 'ராக்ஸ்டார்' அனிருத்தின் Hukum இசை நிகழ்ச்சியின் ஃபைனல் சென்னையில் நடைபெறுவதால் மிகப் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஒருங்கிணைப்பாளர்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ஃபைனல் சவுண்ட் மிக்ஸிங் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருவதால், கூலிக்குப் பிறகுதான் Hukum என கமெண்ட் அடுத்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











