குழந்தை கடத்தல்: திரௌபதி நடிகையிடம் போலீஸ் துருவித் துருவி விசாரணை
கொல்கத்தா: குழந்தைகள் கடத்தல் தொடர்பாக சிஐடி அதிகாரிகள் நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான ரூபா கங்குலியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஒன்று குழந்தைகளை சட்ட விரோதமாக வெளிநாட்டினருக்கு தத்துகொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தைகள் கடத்தல் வழக்குப்பதிவு செய்த சிஐடி போலீசார் அந்நிறுவன தலைவர், பாஜக மாநில மகளிர் அணி தலைவர் ஜூஹி சவுத்ரி உள்ளிட்டோரை கைது செய்தனர்.

ஜூஹி சவுத்ரியுடன் தொடர்பு வைத்திருந்த நடிகையும், பா.ஜ.க. எம்.பி.யுமான ரூபா கங்குலியிடம் சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மகாபாரதம் தொலைக்காட்சி தொடரில் திரௌபதியாக நடித்து புகழ் பெற்றவர் ரூபா.
ரூபாவின் வீட்டில் வைத்து இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

இது அரசியல் நோக்கத்துடன் பழிவாங்கும் செயல். எனக்கு தெரியும். எனக்கும் இந்த வழக்கிற்கும் தொடர்பு இல்லை. எங்கள் கட்சியை சேர்ந்தவரை தவறுதலாக இந்த வழக்கில் குற்றம்சாட்டியுள்ளனர்.
ஜூஹி அப்பாவி. அவர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டிருக்க மாட்டார். இந்த வழக்கு விசாரணைக்கு நான் முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றார்.


Click it and Unblock the Notifications











