RRR: தவளை புத்தி.. தெலுங்கு கொடி உயர பறக்குதுன்னு கொண்டாடிய ஆந்திர முதல்வர்.. சண்டைக்கு வந்த பாடகர்!
ஹைதராபாத்: ஆஸ்கர் விருது விழாவில் இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் மரகதமணி கீரவாணி இசையில் உருவான ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதினை வென்றது.
இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் இருவரும் ஆஸ்கர் மேடை ஏறி விருதினை பெற்றுக் கொண்டனர்.
பிரதமர் மோடி, ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் படக்குழுவை வாழ்த்தினர். ஜெகன் மோகன் ரெட்டியின் ட்வீட்டை பிரபல பின்னணி பாடகர் "தவளை புத்தி" என விமர்சித்து இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நாட்டுக்கே பெருமை சேர்த்த நாட்டு நாட்டு
தெலுங்கில் நாட்டு நாட்டு என உருவான ஆர்ஆர்ஆர் படத்தின் பாடலிலேயே அந்த படத்தின் ஒட்டுமொத்த கதையும் அடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்திற்காக போராடும் இரு போராளிகள் ஒட்டுமொத்த ஆங்கிலேயர்களையும் அந்த பாடலிலேயே வீழ்ச்சி அடைய செய்திருப்பார்கள் என்கிற அர்த்தத்துடன் உருவாக்கப்பட்டுள்ள அந்த பாடல் ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதினை வென்று நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளது.

ஆஸ்கர் வாங்கியாச்சு
இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ஹாலிவுட் படமான ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஆஸ்கர் விருதுகளை வென்ற நிலையில், இந்திய படமான ஆர்ஆர்ஆர் படத்தின் பாடலுக்காகவே 95வது ஆஸ்கர் விருது விழாவில் ஆஸ்கரை வாங்கி விட்டோம் என ஒட்டுமொத்த இந்தியர்களும் நாட்டு நாட்டு பாடலையும் ஆர்ஆர்ஆர் படக்குழுவையும் கொண்டாடி வருகின்றனர்.

ஆந்திர முதல்வர் பாராட்டு
ஆந்திராவின் முதலமைச்சரான ஒய்.எஸ் . ஜெகன் மோகன் ரெட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ராஜமெளலி, இசையமைப்பாளர் கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் மற்றும் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆரையும் அவர்களது திறமையான ஆட்டத்துக்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

தெலுங்கு கொடி பறக்குது
இந்திய சினிமா என்றாலே இந்தி சினிமா தான் என்கிற மாயையும் பாலிவுட் மட்டுமே இந்திய சினிமா என்றும் இத்தனை ஆண்டுகளாக இருந்த நிலையை போக்கி தெலுங்கு கொடி தற்போது உலகளவில் ஒய்யாரமாக பறக்கிறது. அதற்கான சிறப்பான வேலையை செய்த இயக்குநர் ராஜமெளலியை பாராட்டுகிறேன் என ஜெகன் மோகன் ரெட்டி குறிப்பிட்ட நிலையில், இந்தி ஆதரவாளர்களுக்கு அவரது ட்வீட் சுருக்கென பட்டு விட்டது.

சண்டைக்கு வந்த பாடகர்
ஆர்ஆர்ஆர் திரைப்படத்தையும் நாட்டு நாட்டு பாடலையும் இந்தியர்களே கொண்டாடி வரும் நிலையில், தெலுங்கு கொடி உயர பறக்கிறது என பதிவிட்டு இருப்பது அரசியல் நிலைபாட்டையே குறிப்பதாகவும் ஆந்திர முதலமைச்சர் பாகுபாடு பார்ப்பதாகவும் இது முற்றிலும் தவறான விஷயம் என பிரபல பின்னணி பாடகர் அத்னன் சாமி சர்ச்சையை கிளப்பி ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியிடமே சண்டைக்கு சென்றுள்ளார்.

தவளை புத்தி
குளத்தில் இருக்கும் தவளை புத்தி தான் ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டிக்கு என படு மோசமாக விமர்சித்து அத்னன் சாமி சர்ச்சையை கிளப்பியதும் ஆந்திர முதலமைச்சரின் செய்தித் தொடர்பாளர் முதலில் நீங்கள் ஒரு முதலமைச்சர் பற்றி பேசும் போது நாகரீகமாக பேச வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் என எச்சரித்துள்ளார்.

தரமான பதிலடி
மேலும், ஆர்ஆர்ஆர் திரைப்பட்ம் தெலுங்கு தயாரிப்பாளர் தயாரித்து தெலுங்கு இயக்குநர் இயக்கி தெலுங்கு ஹீரோக்களான ராம்சரண், ஜூனியர் என்டிஆர் நடித்த டோலிவுட் படமாகும். அதனால், எங்கள் தாய் மொழியின் பெருமையை நாங்கள் பேசுவதில் எந்தவொரு தவறும் இல்லை என்று தரமான பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக இயக்குநர ராஜமெளலி அமெரிக்காவிலேயே இது பாலிவுட் படம் அல்ல டோலிவுட் படம் என்று குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











