Vijayakanth: பணத்தைக் கொட்டிக் கொடுத்தார்கள்.. விலைபோகாத விஜயகாந்த்.. விஜய்யின் அப்பா சொன்ன காரணம்!
சென்னை: மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் அவர் வாழ்ந்த காலங்களில் பல நன்மைகளை திரைத்துறையினருக்கும், தனது ரசிகர்களுக்கும் மக்களுக்கும் தனது கட்சிக் காரர்களுக்கும் செய்துள்ளார். இப்படியான நிலையில் அவர் தனது வாழ்நாளில் ஒரே ஒரு விளம்பரத்தில் கூட நடித்ததில்லை. இப்படியான நிலையில் நடிகர் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ். ஏ. சந்திர சேகர் சமீபத்தில் அளித்த பேட்டியில், விஜயகாந்த் விளம்பரங்களில் இந்த காரணத்திற்காகத்தான் நடிக்கவே இல்லை எனக் கூறியுள்ளார்.
கேப்டன் விஜய்காந்த் சினிமாவில் நடிக்கும்போதே தமிழ் நாட்டு மக்களின் நம்பிக்கையை பெருமளவிற்குப் பெற்றார். தன் மீது அன்பு வைத்துள்ள மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் என பொது வாழ்வில் ஈடுபட்டார். தமிழ்நாட்டின் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவராகவும் உயர்ந்தார். கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பரில் உடல்நலக் கோளாறினால், மறைந்தார். அவரது மறைவுக்கு தமிழ் நாடு மட்டும் இல்லாமல், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து எல்லாம் மக்கள் வந்து, அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த பின்னரும் விஜயகாந்த் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம், விஜய்யின் கோட் படத்தில் நடித்ததைப் போல் காட்சி உருவாக்கப்பட்டது. லப்பர் பந்து எனும் படத்தில் கேப்டன் விஜய்காந்த்தின் ரெஃபரன்ஸ் படம் முழுவதும் இருந்தது. விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படைத் தலைவன் படத்தின் டீசரில் விஜயகாந்த் இருப்பதைப்போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கேப்டன் மறைந்தாலும் அவரது தாக்கம் சினிமாவில் இருந்து இன்னும் விலகவில்லை. தமிழ் சினிமாவில் பல இயக்குநர்களை உருவாக்கியவர் கேப்டன் விஜயகாந்த்.
கேப்டன்: ஒரே ஆண்டில் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வெளியிட்டவர். அதில் பல படங்கள், வெள்ளி விழா கண்டது. இப்படி இருக்கும்போதுதான் அரசியலில் கால்பதித்தார். விஜயகாந்த், ஒரு வரலாற்றினை தமிழ் சினிமாவில் உருவாக்கிவிட்டுச் சென்றுள்ளார். ஆமாம், தமிழ் சினிமா புரெடக்ஷன் நிறுவனங்கள், நடிகர்கள் தொடங்கி, லைட் மேன்கள் வரை அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவை பரிமாறுகின்றார்கள் என்றால், அதனைச் சாத்தியப்படுத்தியது கேப்டன் தான்.
எஸ்.ஏ. சி: இப்படியான நிலையில் கேப்டன் விஜயகாந்த், ஒரு இயக்குநருடன் இணைந்து அதிக படங்களில் நடித்துள்ளார் என்றால், அது, இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் உடன் தான். இருவரும் இணந்தாலே படம் வெற்றி விழா கொண்டாடும் எனும் அளவிற்கு இவர்களது கூட்டணி இருந்துள்ளது. அப்படி இருக்கும்போது, விஜய்காந்த் குறித்து பேட்டி ஒன்றில் எஸ். ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.

விளம்பரங்கள்: அதாவது, அந்தப் பேட்டியில், " ஒருமுறை நான் விஜயகாந்த்திடம் விளம்பரங்களில் நடிக்கலாம் இல்லையா? அங்கு நல்ல சம்பளமும் வரும். அப்படி இருக்கும்போது ஏன் விளம்பரங்களில் நடிக்காமல் இருக்கின்றீர்கள் எனக் கேட்டேன். அதற்கு அவர், " சார், நான் ஒரு கூல் டிரிங்ஸ் விளம்பரத்தில் நடிக்கின்றேன் என வைத்துக் கொள்ளுங்கள். அப்படி நடித்தால், அந்த கூல் டிரிங்ஸை வாங்க முடியாத ஏழை ரசிகர் ஒருவர் இருப்பார் இல்லையா? அவர் நான் வாங்கிக் குடிக்கின்றேன் என அவரும் வாங்கிக் குடிக்க ஆசைப்பட்டு, அது நிறைவேறாமல் போகலாம் இல்லையா? மேலும் இதனைக் குடிப்பதால் என்ன பக்கவிளைவுகள் வரும் என யாருக்குத் தெரியும்? என கேள்வி எழுப்பினார். இதனால்தான் விஜயகாந்த் ஒரு விளம்பரப் படத்தில் கூட நடிக்கவில்லை" எனக் கூறினார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











